-->

கரும்புலிகள் வரலாறு <ஜுலை.05>


ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது. வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது. கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார். இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான். இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990 ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற ' எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது. இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ. என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989 ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார். இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984 ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987 அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார். இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19 ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள். 18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18 மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே. ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது. விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000. 04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25. 04.2001 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும். இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23 கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனும், பிரிகேடியர் பால்ராஐ்சுக்கும் இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின்தொடர்வோம். - கலியுகன்

எல்லாளன் நடவடிக்கை கைப்பற்றிய நிமிடங்கள்

கரும்புலிகள் வசப்படுத்திய அந்த நிமிடங்கள் ... அனுராதபுரம் வான்; படைத்தளத்திற்குள் திங்கள் அதிகாலை மூன்று மணியளவில் 21 பேர்களைக் கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் சிறப்புப் படையணியினர் ஊடுருவினர். ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளையும் இயந்திர துப்பாக்கிகளையும் பயன்படுத்தி காவலரண்களிலும் வான் ; தளத்தினுள்ளும் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படையினரின் மீது தாக்குதல்களை நடத்தி வான் படைத்தளத்தினை தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்தனர் . அதன்பின்னர் புலிகளின் அணியினர், இளங்கோவுடன் ஒரு பகுதியாகவும் வீமனுடன் ஒரு பகுதியாகவும் இரு குழுக்களாகப் பிரிந்து வான் படைத்தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை அழிப்பதிலும் ரேடார் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர் . ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் . அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள் , அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின . அந்த வான்தளத்தினை திங்கள் முற்பகல் 11.00 மணிவரை தமது கட்டுப்பாட்டிற்குள் கரும்புலிகள் அணியினர் வைத்திருந்ததுடன் அனுராதபுரம் வான்படை தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வானூர்திகளையும் தாக்கியழித்தனர் . அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல் -212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர் . அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர் . இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது . இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார் . அதாவது எம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02 எம்.ஐ-17 உலங்கு வானூர்தி - 01 பெல்-212 - 01 பீச் கிராப்ட்- 01, மு-8 பயிற்சி வானூர்தி - 01 Pவு-6 பயிற்சி வானூர்தி - 03 ஆளில்லா வேவு வானூர்தி - 03 செஸ்னா வானூர்தி - 06 ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார் . இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20- க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி , ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள் , நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் . விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள் அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது . அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர். விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். அனுராதபுர வான்படைத்தள தாக்குதலின் முக்கியத்துவம் சிறிலங்கா அரசும் சிங்கள படைத்துறையும் விடுதலைப் புலிகளை போரில் வென்று வருவதாகவும் விரைவில் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் வன்னி பிராந்தியத்தினையும் சிங்களப்படைகள் கைப்பற்றும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கைகளை வெளியிட்டு தென்னிலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் மற்றும் அனைத்துலக சமூகத்தினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில்தான் இத்தாக்குதல் நடவடிக்கை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இத்தாக்குதலின் மூலம் பல செய்திகளை விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்த முயன்றிருக்கின்றார்கள். - இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் படைத்துறை தொடர்பான விடயங்களை தீர்மானிப்பதில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்துகின்ற பாரிய சக்தியாக தொடர்ந்தும் விளங்குகின்றார்கள் என்பது முதலாவது . - சிறிலங்கா அரசின் பாதுகாப்பு கட்டமைப்புக்களுக்கெல்லாம்; தண்ணி காட்டியபடி தென்னிலங்கையின் எப்பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தம்மால் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது இரண்டாவது. - சிங்களப் படைத்துறையின் வடபோரரங்கு தாக்குதல் நடவடிக்கைக்கான பிரதான பின்தள மையமாக அனுராதபுரம் படைத்தளம் விளங்குவதால் அங்கு மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல் மூலம் சிங்களப் படைத்தரப்பின் எதிர்கால மூலோபாய நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியமை மூன்றாவது. - சிங்களப் படையினர் தமிழீழத்திலே அகலக்கால் வைப்பதனால் தமிழீழத்தில் மட்டுமல்லாது தென்னிலங்கையில் காணப்படுகின்ற சிங்கள படை முகாம்கள் எல்லாமே புலிகளினால் இலகுவாக தாக்கியழிக்கப்படும் என்ற செய்தியை தெரிவித்துள்ளமை நான்காவது. - விடுதலைப் புலிகளின் தரைப்படையுடன் வான்படையும் இணைந்து நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற மரபுவழி போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியமை ஐந்தாவது. - இந்த வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையின் மூலம் தாயகம் , மற்றும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் மனங்களிலே வெற்றிக்களிப்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியமை ஆறாவது .

எல்லாளன் நடவடிக்கை கப்டன் இளங்கோ இறுதிவரிகள்

'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம் . இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம் . அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும் . உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும் . ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள் . வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம் ." கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. 09.10.2007 என் அன்பான மக்களுக்கு, சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள் . இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன். தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம் . இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம் . அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும் . உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும் . அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள் . வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம் . அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம் . நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது . இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும் . எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம் . இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு . வழிகாட்டத் தலைவர் இருக்கிறார் . நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும் . புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் . தலைவர் கவனம். தலைவர் எங்கட வழிகாட்டி. தலைவர்தான் எங்கட அப்பா. தலைவர்தான் எங்கட அம்மா. அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது. இ.இளங்கோ. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது . தேசியத் தலைவரினால் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு துல்லியமான முறையிலே குறுகிய நேரத்தினுள் சிறப்பு கரும்புலி அணியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்களையும் அவர்களது போரிடும் ஆற்றலையும் வல்லமையையும் மீண்டும் ஒரு தடவை சிங்கள அரசிற்கும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளதாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் அனைத்துலகச் செய்தி நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

லெப் கேணல் இளங்கோவனின் இறுதிகுரல்<எல்லாளன்தாக்குதல்

இளங்கோவனின் இறுதிக் குரல் .... விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை. வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார் . அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி , தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான். 'தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ . தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன் . நான் தொடர்பைத் துண்டிக்கிறன்....." என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது . இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு , தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம் , அன்பு எல்லாமே போற்றுதற்குரியது. அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும் . இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும் . -புரட்சி (தாயகம்)-

எல்லாளன் <கிபி145-கிபி101>

எல்லாளன் எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான் . இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது . இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும் , சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான் . ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் ஆவான். அதற்கான ஆதாரங்கள் உண்டு. உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் ஆங்கிலேய நாட்டவரான எச் .பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக்கூறியுள்ளார் கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் ( கி.மு247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் ( கி.மு29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர் இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை . ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம் , 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமை க்கு சிறந்த சான்று

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 21 - முடிவை நோக்கி)

பத்து நாள் இடை விடாத போரால் களைத்து, நாளையும் போர் முனை செல்ல வேண்டுமென நினைத்த பறங்கி வீரரில் மூவர் தமது பாசறையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'அப்பப்பா! எத்தனை போர்களை கண்டிருக்கின்றேன். எந்தப் போரும் இவ்வளவு நாட்கள் நீடித்ததில்லையே! பல இடங்களில் தாக்குப் பிடிக்க முடியாது நாங்களே பின் வாங்கியிருக்கின்றோம். ஆனால் தளபதி சளைக்காமல் போராடச் சொல்கிறாரே" என்றான் உலோப்பே. 'ஆம், அன்று சங்கிலி தன்னிடம் சவால் விட்டதைக் கண்டு மிகவும் மனம் வெகுண்டிருக்கின்றார் தளபதி. சங்கிலியைத் தோற்கடித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்" என்றான் மிக்கேல். 'எனக்கென்னமோ, இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோமென்று தோன்றவே இல்லை. ஆகா! அந்தத் தமிழ்த் தளபதி இருக்கின்றர்னே! என்ன மாதிரிப் போராடுகின்றான். எவ்வளவு சிறப்பாக படையை வழிநடத்துகின்றான். நம் தளபதி அவனிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது" என சூசை கூறினான். இதனால் மூவரும் பெரிதாக நகைத்தனர். வெளிநாட்டு மதுவை உறிஞ்சிக் கொண்டிருந்த மூவரில் போதையின் உச்சத்திலிருந்த உலோப்பே 'எங்களுக்கு மட்டும் வெற்றி கிடைக்கட்டும், யாழ் மண்ணை எவ்வாறு கொள்ளையடிக்கின்றேனென இருந்து பார்" என்றான். 'ஆம், ஒரு கன்னிப் பெண்களையும் விடுவதில்லை. அவர்கள் தான் எத்தனை அழகு" என சிலாகித்தான் இன்னொருவன். 'போன தடவை திருகோணமலையில் நடந்த போரின் பின்னரான கொள்ளையடித்தலில், நான் ஒரு கோயிலுக்குச் சென்றேன். அப்பாடா! என்ன நகைகள், தங்கம், வெள்ளி, இரத்தினங்களென கொட்டிக் கிடந்தது. அதை நான் எடுக்க முன் தளபதி அள்ளிச் சென்று விட்டான்" என சினந்தான் சூசை. இவர்கள் இடத்திற்கு தளபதி பிரகன்ஸாவும், கோட்டைத் தலைவன் தொன்பிலிப்பும் வந்தனர். ஆதலால் தங்கள் சம்பாசனையை மூவரும் நிறுத்திக் கொண்டனர். "என்ன இரண்டாம் நிலைத் தளபதிகளே! மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கின்றதே, நாளை நமக்குத் தான் வெற்றி. பயப்பட வேண்டாம். நன்றாக மது அருந்துங்கள்" என்றான் தொன்பிலிப்பு. 'அட! நீங்க வேற, நாளை மது அருந்துவதற்கு நாங்கள் இருப்போமோ தெரியாது. அது தான் இன்று நன்றாக அருந்துகின்றோம்" என்ற உலோப்பையை சுடும் விழிகளால் பிரகன்ஸா பார்த்தான். 'ஏன் அப்படிக் கூறுகின்றாய்?" 'அவர்கள் என்ன மாதிரிப் போரிடுகிறார்களென்று பார்த்தீர்கள் தானே! அவர்கள் பலத்திற்கு முன்னால் எங்கள் துப்பாக்கிகள் எல்லாம் வெத்து வேட்டுக்கள்." 'நாம் இப்போரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். குறைந்த பட்சம் சங்கிலியையாவது பிடிக்க வேண்டும்." 'அது முடியுமா? பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் தானே! சிறிதாவது அஞ்சுகிறானா சங்கிலி. படையின் முகப்பில் நிற்கின்றார். ஆனால் அவன் சுண்டு விரலைக்கூட எங்களால் நெருங்க முடியாதுள்ளது. ஆகா! அவன் குதிரை தான் எத்தனை அற்புதம். மின்னல் போல அங்குமிங்கும் தோண்றுகின்றதே. அது தான் எத்தனை அழகு!" என்றான் மிக்கேல். 'எது எவ்வாறு இருந்தாலும் நாளை சங்கிலி பிடிபட்டே தீருவான். அஞ்சாதீர்கள் வெற்றி நமக்குத் தான்" எனக் கூறிவிட்டு பிரகன்ஸா கோட்டைத் தலைவனுடன் வெளியேறினான். மறுபுறம் சங்கிலி, பாசறையில் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடலில் இருந்தான். 'என்ன அற்புதமாக பறங்கிகள் போராடுகின்றார்கள். இதல்லவா வீரனுக்குச் சவால். போராடுவதற்கு எவ்வளவு சீரமப்பட வேண்டியுள்ளது. உண்மை வீரர்கள் அவர்கள் தான்." என்று எதிரி வீரர்களின் திறன் பற்றி தனது கருத்துக்களை சங்கிலி கூறினான். 'பிரபு! நாங்கள் இப்போரில் வீரத்தை விட விவேகத்தையே பயன்படுத்துவது மிகச் சிறந்தது. படையளவில் எங்கள் படை பெரிதானாலும், அவர்கள் குண்டுகளை சமாளிக்க முடியாது இதனால் புத்தியை மிகவும் கூர்மையாக்கி போரிட வேண்டும். அதற்கு ஏற்றால் போல் வீரர்களை தயார் படுத்த வேண்டும்." என்றான் தளபதி இமையாணன். 'தளபதியே! நீர் இருக்கும் போது எனக்கென்ன கவலை, நிச்சயம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம்" என்றான் சங்கிலி. அங்கு அரண்மையில் இராசமாதேவியும் அங்கயற்கன்னியும்... 'போரிற்குச் சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் களமுனையிலிருந்து எதுவித தகவலும் வரவில்லையே. என்ன நடக்கின்றதோ" என பயத்தால் படபடத்தாள் தேவி. 'தேவி! இப்பொழுது தான் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரி திருநீறு, சந்தனம் என்பவற்றை இத்தாம்பாளத்தில் கொண்டு வந்து என்னிடம் தந்து விட்டுப் போகின்றார். அம்மனுக்கு முன் பூஜையில் நீங்கள் வைக்கும்படி கூறிய பூக்கட்டுக்கள் இத்தொன்னையில் இருக்கின்றன. கற்பூரம் கொழுத்துகின்றேன். இதில் ஒரு பூக்கட்டை எடுங்கள், பார்ப்போம்" என்றாள். வீரமாகாளியை மனதால் வழிபட்ட மாதேவி மிகுந்த பயத்துடனும், பக்தியுடனும் ஒரு பூக்கட்டை எடுத்தாள். 'தோழி! இக்கட்டை அவிழ்க்க எனக்குப் பயமாக இருக்கின்றது. நீதான் அவிழ்த்து அதற்குள் என்ன நிறப் பூ இருக்கின்றது என்று பார். வெள்ளைப் பூவாயின் எங்களுக்கு வெற்றி" எனக் கூறினாள். பூக்கட்டுக்களை வாங்கிய அங்கயக்கன்னி மெதுவாக அவற்றை அவிழ்க்கின்றாள். அவள் முகம் மலர்கின்றது. 'தேவி! இதோ பாரங்கள் நீங்கள் நினைத்த வெள்ளைப்பூவே வந்துள்ளது. வீரமாகாளி எங்களை கைவிடாள்" எனக் கூறினாள். 'முன்பே நான் கூறவில்லையா?, எல்லாம் அம்மன் அருள் தான்" 'இனியாவது அரசரை நினைத்து கலங்குவதை விட்டு விடுங்கள். எமக்கே வெற்றியென பூக்கட்டும் காட்டி விட்டது. அரசரின் ஆண்மையின், போர் வன்மையும் உங்களுக்கு தெரிந்த விடயம் தானே!" 'ஆம், போரில் தான் அவருக்கு சமனானவர் எவருமில்லையே!" இப்படியாக பலரின் எதிர்பார்ப்புக்களுக்கிடையே முடிவை நோக்கிய போருக்காக மறுநாள் பொழுதும் விடிந்தது... சாதிக்க வருவான்....

சரித்திர வீரன் சங்கிலி (பாகம் 20 - போர் ஆரம்பம்)

முதுவேனிற் காலத்து புழுக்கம் மரஞ்செடி கொடிகளையெல்லாம் ஆடாமல் அசையாமல் அப்படியே சித்திரங்களாக அமைத்து வைத்திருந்தது. அவற்றின் முற்றிய கிளைகளிலும் நாரேறிய கொடிகளிலும் மலர்கள் குறைவாகவும் காய் கனிகள் மிகுதியாகவும் பலவித வண்ணங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றிடையே கொழுந்துளிர்களே இல்லாமல் கரும் பச்சை நிறமான முதிர்ந்த இலைகள் மலிந்து அடர்த்தியாக மண்டிக் கிடந்தன. மலரும் காலம் போய் கனியும் காலம் வந்துவிட்டதால் வண்டுகளும் தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் மலரற்ற மரஞ்செடிகளைச் சுற்றிச் சுற்றி வந்து சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தன இதற்கு மாறாக பழந்தின்னி பட்சிகளும் அழகிய அணிற்பிள்ளைகளும் மகிழ்ச்சிக் குரலெழுப்பிக் கனிகளை தாங்கிய கிளைகளையும் கொப்புகளையும் வலம் வந்து கொண்டிருந்தன. சட்டநாதர் கோவிலுதும் வீரமாகாளி அம்மன் கோயிலதும் அருட் கடாட்சத்தை மனதில் நினைத்து அத்தெய்வங்கள் மீது பாரத்தை போட்டுவிட்டு தளபதி இமையாணனுடன் படை அணி வகுப்பை பார்க்க சங்கிலி சென்றான். “என்ன இமையாணா! நம்படை மிகுந்த திடத்துடன் இருக்கின்றதா?” “ஆம் அரசே!” “பறங்கிகள் துப்பாக்கியின் துணை கொண்டு போரிடுவார்கள். எமக்கு அந்த வசதி இல்லை. அதனால் எச்சரிக்கையுடன் நாம் போரிடாது விட்டால் நமக்கு இழப்பு அதிகமாகும் தளபதியாரே” “அதற்கேற்றது போலவே நம் படையையும் அணிவகுத்துள்ளேன். குறிபார்த்து கவண்கல் வீசும் வீரர்களையும் எரியம்புகளை வீசுபவர்களையும் படையின் முன்புறத்தில் நிறுத்தியுள்ளேன். காலாட் படைகளையும் குதிரைப்படைகளையும் அணிவகுப்பின் பின்புறத்தே நிறுத்தியுள்ளேன். அத்துடன் போருக்கு தேவையான ஆயுதங்களையும் வீரர்களுக்கு தேவையான உணவையும் யானைகளிலேற்றி படையின் இறுதியில் நிறுத்தியுள்ளேன”;. “அப்படியா! மிக்க சந்தோஷம். நான் வீரர்களைச் சென்று சந்திக்க வேண்டும். அவர்களை மனதளவில் திடப்படுத்த வேண்டும்” என்றான் சங்கிலி. “அவ்வாறே செய்யலாம்” எனக் கூறிய இமையாணன் சங்கிலியை வீரர்களின் பாசறைக்கு அழைத்துச் சென்றான். நடக்கவிருக்கின்ற போரின் விளைவுகளை அறியாத சங்கிலியின் வீரர்கள் குடித்தும் கும்மாளமிட்டும் மிகவும் மகிழ்ச்சியுடன் தமது கூடாரங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்பட்டனர். சங்கிலியின் வருகையை அறிவிக்கும் தாரைகள் ஊதப்பட்டதால் தங்கள் நிதானத்திற்கு வந்த வீரர்கள் அமைதியாக நின்றார்கள். களமுனைத் தளபதிகளை சந்தித்து ஆலோசனை கூறிய சங்கிலி வீரர்களுடனும் சிரித்துப்பேசி நடக்கவிருக்கும் போர் பற்றிய சிறு விளக்கத்தையும் கொடுத்து அவர்களைத் திடப்படுத்தினான். பின் அங்கிருந்து புறப்படும் போது “நாளை உதயத்தில் பறங்கிகளோடு யுத்தத்திற்கு ஆயத்தமாகவிருக்கும் படி” கூறிவிட்டு கோட்டைக்குத் திரும்பினான். மறுநாட்காலை எழுந்து நீராடி வீரமாகாளி அம்மனை வழிபட்டு போருக்கான கவசங்களையும் புனைந்து கொண்டு தன் நீண்ட வாளை ஒருமுறை கூர்பார்த்து இடையில் கட்டிக்கொண்டு கோட்டையிலுள்ள அம்பிகையை வழிபடச்சென்றான். அங்கு ஏற்கனவே ஆயத்தமாக சங்கிலியனுக்காக பூஜை முடிந்த பின் மங்கல ஆராத்தியுடன் நின்ற இராசமாதேவி அவனை வரவேற்று நெற்றியில் வீரத்திலகம் இட்டாள். அங்கிருந்து புறப்பட்ட சங்கிலி கோட்டை வாயிலுக்கு வந்து, அலங்கரிக்கப்பட்ட நிலையில் தயாராகவிருந்த தன் குதிரை பஞ்ச கல்யாணியில் ஏறி படையணிவகுப்பைப் பார்த்தான். கடலென ஆர்ப்பரித்து நின்ற அப்படையணி “ சங்கிலி வாழ்க!, சங்கிலிக்கே வெற்றி!” போன்ற கோஷங்களை பெரிதாக எழுப்பினர். படையணிவகுப்பின் முகப்பில் வீரமாப்பாணனும் இமையாணனும் பூரண போர்க்கவசமணிந்து வீராப்புடன் நின்றிருந்தனர். சங்கிலி படையணி புறப்படுவதற்கு அறிகுறியாக தனது வாளை வானை நோக்கி உயர்த்தி இருமுறை ஆட்டினான். கோட்டை மீதிருந்த டமாரங்கள் சப்தித்தன. சங்குகள் முழங்கின. வீரர்களின் ஜயகோஷத்துடன் படை நகர்ந்தது. வீதிகளெங்கும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி ஆசீர்வதித்தனர். மாட மாளிகைகளில் ஏறிநின்ற பெண்கள் மலர் மாரி தூவினார்கள். இவ்வாறு புறப்பட்ட சங்கிலியின் படை வீரமாகாளி அம்மன் கோயில் மேலை வெளியிலே கடல் போலப் பரப்பி நின்றனர். அணி வகுப்பின் முகப்பில் மிதுனக் கொடி ( யாழைக் கையிலேந்திய சயமகட் கொடி, சங்கிலி மன்னன் வரை யாழ்ப்பாணக் கொடியாகவிருந்தது) கம்பீரமாகப் பறந்தது. பறங்கிகளது சேனையும் துப்பாக்கி வீரர்களை முன்னிறுத்தி சங்கிலி வீரர்களை எதிர்கொள்ள தயாராகவே நின்றது. போர் ஆரம்பமாகியது. துப்பாக்கி ரவைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்வதற்காக நிலத்தில் படுத்த சங்கிலி வீரர்கள், அவர்கள் ரவைகளை ஒவ்வொன்றாக மாற்றும் போது எழுந்து கவண்கல்லையும் எரியம்புகளையும் வீசினார்கள். இதனால் நிலைகுலைந்த பறங்கியர்களிள் நிதானமாக போரிட்டனர். இருபக்கங்களிலும் நிறையப் பேர் காயமுற்றனர். சில வீரர்கள் மாண்டார்கள். படையணியின் முன்னிலையில் சங்கிலி நின்று வழிப்படுத்தினான். இதனால் இமையாணனும் வீரமாப்பாணனும் அரசனின் பாதுகாப்பிற்காக முன்னிலையில் வரவேண்டியதாயிற்று. முக்கிய தலைவர்களின் உற்சாகத்தால் சங்கிலி படை வீரர்கள் ஆவேசமாகப் போரிட்டார்கள். முதன் நாட் போரில் வெற்றி தோல்வி காணும் முன் சூரியன் அஸ்தமனமாயிற்று. இதனால் இறந்த வீரர்களின் சடலங்களுடன் இருபக்க வீரர்களும் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள். இரண்டாம் நாளும் இவ்வாறே போர் நடந்தது. இருபக்க வீரர்களும் சளைக்காது போரிட்டார்கள். பறங்கிகள் தமது துப்பாக்கிகளை இலக்கு நீட்டிப் பார்க்க ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ஒவ்வொருவராய் நின்று சங்கிலி வீரர்கள்திரிவாய்க்கு நெருப்பு வைக்க அவற்றில் சில பற்றியும், இலக்குத்தப்பியும், சில பற்றாமலும் பொய்த்தன. இந்த விசித்திர போராட்டத்தை தடுப்பதற்கு உபாயத்தை அறியாத பறங்கி வீரர்கள் திகைத்து நின்றனர். முதன் நாள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு சிறிது பயந்த சங்கிலி வீரர்கள் மறுநாள் மிக்க தைரியத்துடனும் ஊக்கத்துடனும் போரிட்டனா. இதற்கிடையில் அம்புகளும், கவண்கல்லும் எறியாயுதங்களும், நஞ்சூட்டிய ஈட்டிகளும், அம்புகளும், வளை தடியென்னுஞ் சக்கரங்களும் சங்கிலி படையிலிருந்து பறந்து சென்றன. இரு பகுதியிலும் அநேகர் மாண்டனர். ஆனாலும் போர் ஒரு முடிவுக்; காகத் தொடர்ந்தும் நடந்தது. அவ்வளவிற் சூரியனும் மேல் கடல் வாயடைந்தான். சேனைகளும் தத்தம் உறைவிடஞ் சென்றனர். இப்படியே பத்து நாட்கள் யுத்தம் நடந்த போதும் ஒரு முடிவும் கிட்டவில்லை. இதனால் இருபக்க தலைவர்களும் பெரிதும் சலிப்பிற்கும், வாட்டத்திற்கும் உள்ளானார்கள். இறுதி முடிவுக்காக மறுநாளும் போர்க்களம் செல்லத் தீர்மானித்தார்கள். சாதிக்க வருவான்.

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 19 சிக்கல் சந்திப்பு)

கார் காலத்து கருமேகங்கள் சூழ் கொண்ட இளம்பெண்ணைப் போல் வான வெளியில் மெல்ல மெல்ல நீந்திச் சென்று கொண்டிருந்தன. வானின் பசுமை ஒளியைக் கரு முகிற் படலம் மறைத்துவிட்டிருந்ததால் அந்தக் குளிர்ந்த மாலை நேரம் தன் வனப்பை இழந்து வெளிறிக் காணப்பட்டது. மழை மஞ்சுக் கூட்டங்களின் மேல் புரண்டு வந்த காற்று, சங்கிலியின் அழகிய கோட்டையைத் தழுவிச் சென்றது. சிந்தனை என்னும் செந்தழலில் வெந்து தீய்ந்து கொண்டிருந்த சங்கிலி அந்த வேக்காட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தன் பள்ளியறை சென்றான். கதவினைத் திறந்த சங்கிலிக்கு கட்டிலில் இருந்த அழகைக் கண்டவுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. விறு விறுவென அதனை நோக்கிச் சென்ற அவன், “நீ எப்படி இங்கு வந்தாய்?” என வினவினான். “ஏன் வரக் கூடாதா? என அவ்வழகு வினவியது. “எலியானா! என்னுடன் விளையாடாதே. உன்னை இங்கு வர யார் அனுமதித்தது?” “யார் அனுமதிக்க வேண்டும்?” “காவல் பலமாகவிருக்கின்றதே!” “அதனாலென்ன…” “உன்னை ஒருவரும் தடை செய்யவில்லையா?” “பல பேர் என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே அசடு வழிந்து விட்டு விட்டார்கள். விசாரிக்க நினைத் ஒரு சிலரையும் தங்க நாணயங்கள் கொண்டு மயக்கி விட்டேன்” என அவனைப் பார்த்து மோகனப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள். “நீ நினைப்பதைப் போல் என்னை இலகுவில் மயக்கிவிட முடியாது” என்றான் சங்கிலி. “அதையும் பார்ப்போமே!” என்று இளக்காரமாகச் சொன்னால் எலியானா. “ஏன் கால் கடுக்க நிற்கின்றீர்கள். இப்படி அமருங்கள்.” என தான் சற்றுத் தள்ளி பஞ்சணையில் சங்கிலி அமர்வதற்கென ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தாள். அதில் உட்காராமல் சங்கிலி நின்றதைப் பார்த்ததும் “பரவாயில்லை, நானும் எழுந்து நிற்கின்றேன்” என எழுந்து சங்கிலியின் கையைப் பற்றினாள். அவ்வாறே அவனையும் இழுத்து மஞ்சத்தில் விழுத்திவிட்டு அவர் மார்மேல் படுத்தாள். அவள் இன்பங்கள் தன்மீது பட்டதால் சங்கிலி பெரிதும் சஞ்சலமடைந்தான். ஆனாலும் அவளைத் தள்ளிவிட அவன் கைகள் எழவில்லை. மாவீரனான சங்கிலிக்கு எலியானாவைத் தள்ளுவது பெரிய வேலையா என்ன! ஆனால் அவன் இருந்த நிலைமையில் அவனால் முடியவில்லை. இதனை அவதானித்த எலியானா சங்கிலியின் மனது சஞ்சலமடைவதை உணர்ந்ததால் மெல்ல எழுந்து தனது ஆடைகளை களைய ஆயத்தமானாள். இந்த நேரத்தில் சுதாகரித்துக் கொண்ட சங்கிலி “உனக்கென்ன பைத்தியமா?” எனக் கூவினான். அவனது அதட்டலான வார்த்தையினால் தான் செய்ய எண்ணிய செயலை நிறுத்தினாலும், அந்தக் குரல் அவள் மந்தகாசத்தை அதிகமாக முகத்தில் பரவவிட்டன. அவள் கண்கள் சிரித்தன. அவனை உற்று நோக்கி உதடுகள் உரைத்தன “யாருக்கும் பைத்தியமில்லை” சங்கிலி அவளை சுட்டுவிடுபவன் போலப் பார்த்தான். “உன்னைத் தவிர வேறு யாருக்கும் பைத்தியமில்லை” என்று சீறினான். “தவறு காதலரே தவறு” என்றாள். “என்னை அப்படி அழைக்காதே” “எப்படி?” “இப்போது அழைத்தாயே, அப்படி” “எப்படி அழைத்தேன்” “அது தான் காதலரே என்று….” அவன் வார்த்தையை சொல்ல முடியாமல் தத்தளித்தான். அவளின் நீள விழிகள் அவனை மீண்டும் நிமிர்ந்து நோக்கின “ஒரு சொல்லைச் சொல்ல இத்தனை பயமா?” என்று வினாவினாள். “பயமொன்றுமில்லை” “இருக்கின்றது” “என்ன காரணம்?” “நான் உங்களைக் காதலிக்கும் அளவிற்கு நீங்களும் என்னைக் காதலிக்கின்றீர்கள்” “இல்லை… பொய்…. பொய்” “உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள்” “இல்லை, முடியாது” பலமுறை கூவினான். “நான் வடிவழகியாக இருந்தால்….” இந்த வார்த்தையால் நிதானத்திற்கு வந்த சங்கிலி “இந்தப் பெயர் உனக்கெப்படித் தெரியும்?” “விசாரித்தேன்” “யாரிடம்?” “பலரிடம்” “ஏன்?” “ஒரு ஆடவனிடம் தானாக வலிய வந்து ஒரு பெண், அதுவும் அழகான பெண்… தன்னைக் கொடுக்கும் போது… வேண்டாம்… என்று கூறுகிறானெனில் அவன் வேறு யார் மீதோ தீராத காதலில் இருக்கின்றான் என்று அர்த்தம். இந்த வீரன் யாரைக் காதலிக்கின்றான் என்று அறியும் ஆவலுடனேயே நான் விசாரித்தேன்” “உனக்கென்ன அக்கறை?” “எனக்கு நீ வேண்டும்” “அது தான் இப்போது உனக்கு புரிந்து விட்டதே. என் மனம் யாரிடமென்று… வீணாக முரண்டு பிடிக்காமல் சென்று விடு” என்று சங்கிலி கூறினான். “முடியாது” “அப்படியெனில் பைத்தியமாக அலை” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு வெளியேற முற்பட்டான். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் திரும்பி எலியானா நோக்கி வந்தான். இதனால் பெரிதும் சந்தோஷமடைந்த எலியானா “இப்போதாவது என் அருமை புரிந்ததா” எனக் கேட்டாள். “நான் உன்னைத் தேடி வரவில்லை. உன்னை எச்சரித்துப் போகலாமென்று வந்தேன். இதோ பார்! எலியானா, உன் காதலன் எனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டான். அவனை நான் இனி மன்னிப்பதாக இல்லை. ஆதலால் அவன் அழிவு நெருங்கிவிட்டது. எனவே உன்னை நான் எச்சரிக்கின்றேன். அவர்களிடமிருந்து வீணாக நீயும் மாண்டு விடாதே! அவர்ளை விட்டும், இவ்விடத்தை விட்டும் நீ சீக்கிரம் உன் ஊர் போய்ச் சேர்” எனக் கூறினான். “என் மீது உங்களுக்கு என்ன அக்கறை?” அவள் கேள்வியில் மரியாதையும், கனிவும், ஆதங்கமும் நிறைந்திருந்தது. அவள் கண்கள் பனித்திருந்தன. இதனைக் கண்ணுற்ற சங்கிலி ‘ இனியும் தாமதித்தால் என் மனம் மாறிவிடும்’ என நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். சிறிது நாட்களின் பின் தளபதி இமையாணன் தலைமையில்

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 18 - சங்கிலியின் கோபம்)

பெரிதும் சங்கடப்பட்டுக்கொண்டு கோட்டையினுள் நுழைந்த சங்கிலி தன்னை எதிர்பார்த்து தன் நண்பன் இருப்பதைக்கண்டதும் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு “என்ன மாப்பாணா! திடீரென்று வந்து நிக்கின்றாய்? என்ன விடயம்?” என்றான். “ஒன்றுமில்லை… அரச பதவி ஏற்றது முதல் நீ என்னுடன் ஊர் சுற்ற வரவில்லை. இப்பொழுது நாட்டு நிலவரம் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இருக்கின்றது. வாவேன் நாங்கள் ஒருமுறை யாழ்ப்பாணத்தைச் சுற்றி வருவோம்” என ஆவலுடன் கேட்டான். தன் மனச்சஞ்சலங்களை தீர்ப்பதற்கு, அதை மறக்கடிப்பதற்கு இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதை அறிந்த சங்கிலி, அதற்கு உடன்பட்டான். முன்பனிக்காலத்து குளிர், உயிரினங்களின் நாடித்துடிப்புக்களையெல்லாம் மந்தப்படுத்தி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. மரஞ்செடி கொடிகளின் இதய நரம்புகள் வரை பனியின் குளிரோட்டம் ஏறிவிட்டிருந்தபடியால் அவை அப்படியிப்படி அசையாமல் விறைத்துக்கிடந்தன. பனிக்காற்றிலுள்ள வரட்சித்தன்மை இலைக்கணுக்களிலிருந்த ஜீவரசத்தையெல்லாம் உறிஞ்சி, அவற்றை பழுத்து உதிரச்செய்து கொண்டிருந்தது. இமயமலைச் சிகரத்திலிருந்து இறங்கி ஓடிவந்தது போல் பனித்துளிகளைச் சுமந்த காற்று எங்கெங்கும் புகுந்து படிந்து எல்லாவற்றையும் ஈரமாக்கியது. அளவுக்கு மீறிய அந்தப் பனிக்குளிர் காற்றில் விறைத்துக்கொண்டு குதிரையில் தோழர்கள் யாழ் நகர் வலம் வந்தார்கள். குளிர்காலமாதலால் இருவருக்கும் ஓரளவு வசதியாகப் போய்விட்டது. வீதியோரங்களில் காவல் வீரர்களைத்தவிர பெரிதாக சனநடமாட்டம் இல்லை. இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட வீரர்கள் தெருக்களில் தலைதாழ்த்தி வணங்கினார்கள். தன் பக்கத்தில் நடுங்கியபடி குதிரையில் வந்துகொண்டிருந்த வீரமாப்பாணனைப் பார்த்த சங்கிலி “இனியாவது நீ எனக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கிறாயா பார்ப்போம்” என்றான். காலை நேரமாதலால் கோயில்களின் மணியோசையும், இசைப்புலவர்களின் பாட்டொலியும் யாழ் நகர் வீதிகள் தோறும் ஒலித்தன. நீண்ட காலத்தின் பின்பு இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு வந்த சங்கிலி, யாழ் நகரிற்கு தெற்கே கடலோரம் வந்தபோது அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு அருகில் வந்த நண்பனைப்பார்த்து “மாப்பாணா! தூரத்தில் ஒரு கோட்டை போல தென்படுகின்றதே, அது என்ன?” என வினவினான். நிமிர்ந்து வடிவாக அதை உற்று நோக்கிய மாப்பாணன் “சந்தேகமேயில்லை… அது கோட்டை தான்” என்றான் கலவரத்துடன்.. “கோட்டையா?....... என்னிடம் அனுமதி பெறாமல் யார் கட்டியது… ஒருவேளை அண்ணனாக இருக்குமோ?” “இல்லையில்லை… அவர் கட்டியிருந்தால் நம் வீரர்கள் மூலம் எப்படியும் தகவல் வந்திருக்கும்” “பின் யார் கட்டியிருப்பார்கள்… நம் ஒற்றர்கள் கூட சொல்லவில்லையே!” “இது பறங்கிகளுக்காக நாம் அளித்த பிரதேசம் சங்கிலி” என்றான் மாப்பாணன். இதனால் ஐயமுற்ற சங்கிலி “வா! அவ்விடம் சென்று பார்ப்போம்” என நண்பனுடன் அவ்விடம் சென்றான். மேற்கத்தேயப் பாணியில் மிகவும் கலை நேர்த்தியுடன் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட அக்கோட்டையை வர வர வியப்புடன் பார்த்து வந்த இருவரையும் இரு வீரர்கள் வழிமறித்தனர். தங்களை வழிமறித்த பறங்கி வீரர்களை கண்டு பெரிதும் சினமடைந்த சங்கிலி “டேய்! உங்கள் தளபதியெங்கே? நான் அவனை உடனடியாகக் காண வேண்டும்” என இடிமுடிக்கம் போல சத்தமிட்டான். அவ்விடம் வந்த பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன அரசே! ஆச்சரியமாக இருக்கின்றதா? இது நாம் கட்டிய சிறிய வீடு. நீங்கள் வருவீர்களென்று தெரிந்திருந்தால் தாரை தப்பட்டைகளுடன் தடபுடலாக அழைத்திருப்போமே” என இகழ்ச்சியுடன் கூறினான். “என்ன காரியம் செய்தாய் பிரகன்ஸா? உனக்கு கோட்டை கட்ட யார் அனுமதியளித்தது” என கண்கள் தீயென சிவக்க சங்கிலி கேட்டான். சிறுதும் பயப்படாமல் “நீயே தந்தாய்….” எனப் பறங்கியத் தளபதி கூறினான். “நானா?...” “ஆம்” பறங்கியரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சங்கிலி, “அடேய், அயோக்கியப் பயலுகளே! இப்போதே கோட்டையை இடித்துவிட்டு மரக்கலமேறி உங்கள் ஊருக்கு செல்லுங்கள்” என ஆணையிட்டான். அவன் ஆணையைக் கேட்ட பிரகன்ஸா பெரிதாக நகைத்து “நாம் இடிக்கப் போவதில்லை, முடிந்தால் நீ இடித்துப் பார்” எனச் சவாலிட்டான். இதனால் வெகுண்ட சங்கிலி “உன் கபடத்தை நானறிவேன். முடிந்தால் உன்னைக் காப்பாற்றிப் பார்” என வீராவேசமாகக் கத்திவிட்டு தன் நல்லூர்க் கோட்டையை வந்தடைந்தான். அவசர அவசரமாகச் சபையைக் கூட்டி நடந்ததை விளக்கினான். அத்துடன் கோபம் கொப்பளிக்க பரநிருபசிங்கனைப் பார்த்து “பார்த்தாயா உன் யோசனையை? நம் நாட்டின் பாதுகாப்பிற்கே பெரிய பங்கம் ஏற்பட்டு விட்டது. இப்பொழுது வேறு வழியில்லை, படையைத் திரட்டுவதைத் தவிர” என்றான். கூடவே தளபதிக்கு யுத்தத்திற்கு தயாராகவும் ஆணையிட்டான். இதனை ஏற்றுக் கொண்ட யாழ் தளபதி இமையாணன், அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானான். நடக்கவிருக்கும் போரையும், அதனால் ஏற்படப்போகும் அழிவுகளையும் நினைத்துப் பார்த்த சங்கிலி பெரிதும் கவலையுற்றவனாய் தன் சயன அறை நோக்கிச் சென்றான். அங்கு அவனது சினத்தை கூட்டக்கூடியதான ஒரு நிகழ்ச்சி காத்திருந்தது. சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 17- வெண்புறா)

நீலவான் நெடுமஞ்சத்தில் ஆடையற்ற நிலவுப் பெண் மோகாவேச போதையுடன் அழகாகப் படுத்துக்கிடந்தாள். அவ்வப்போது தன் குலைந்த தோற்றத்தைக் கண்டு நாணிக் கண்புதைத்து ஓடி வெண்முகில் ஆடையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றாள். அவள் போர்வை கொள்ள மறுத்தாலும் அவளுடைய மூத்த சகோதரியான காற்றுப் பெண் அரக்கப் பறக்க ஓடிவந்து கருநிற முகில்களை இழுத்து அவளை மூடி உள்ளே அனுப்பி விடுகிறாள். ஒன்றின் துன்பத்தைக் கொண்டு இன்னொன்று இன்பம் அனுபவிப்பது நடைமுறைத்தத்துவம் அல்லவா? விரக வேதனையுறும் வெண்ணிலவின் காம ஒளியால் உலகம் ஓர் ஒப்பற்ற காட்சியைச்சாலையாக திகழ்ந்தது. எங்கும் அழகின் பூரிப்பு. இந்த இயற்கையைப் பருகிக் கொண்டு நின்ற சங்கிலி தனக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த யமுனா ஏரியின் குளிர் நீரில் தன் கால்களை அலசிக் கொண்டான். இயற்கையின் இன்பப் பூரிப்பால் திளைத்திருந்த சங்கிலி திடீரென்று வீசிய சுகந்த வாசனையால் பெரிதும் கவரப்பட்டு அது என்னவாக இருக்கும் என அறிய ஆவலில் தலையைத் திருப்பியவன்.. திருப்பியபடி திகைத்து நின்றான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அந்த அழகுச்சிலை மெதுவாக சங்கிலியை நெருங்கி வந்தது. இதனால் பெரிதும் சஞ்சலமடைந்த சங்கிலி “இவள் இங்கு எதற்கு வருகிறாள்? அன்று அரச சபையில் பார்த்ததை விட எத்தனை மடங்கு அழகாக இருக்கிறாள்” என நினைத்துக் கொண்டான். பக்கத்தில் வந்துவிட்ட அந்த பறங்கியப் பெண்ணை தீராத ஏக்கத்துடன் ஒருமுறை கண்களால் அளவெடுத்தான் சங்கிலி. வெளேரெனத் தெரிந்த அவள் கன்னப் பகுதிகளும் கழுத்தும் இருந்த வழவழப்பு சலவைக்கல்லுக்குக் கூட இராதென்று நினைத்தான். சிவந்த சிறு பூவைப் போலிருந்த உதடுகளில் தெரிந்த ஈரம் அவற்றுக்கு தனி மெருகைக் கொடுத்து தேனை உள்ளடக்க முடியாத மலரிதழ்களுக்கு உவமை காட்டியது. வெள்ளைக்காரியாதலால் அவள் கேசம் தங்கநிறம் பெற்றிருந்தது. கண்களும் இமைகளும் வெள்ளைக்கன்ன முகப்புகளில் படுத்துக்கிடந்தன. திண்ணிய மார்பும் இருபுறமும் உட்புறமாக வழித்துவிடப்பட்ட இடைப்பகுதியும் லேசாக எழுந்து பிறகு கீழ்ப்புறம் விர்ரென்று சரிந்து இறங்கிவிட்ட வயிறும் சற்றே அகன்று கிடந்த அழகுக் கால்களும் ஏதோ புதுத் தேவதை மண்ணில் இறங்கியதைப் போல அவளைக் காட்டியது. தன்னை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்ததை ரசித்த வெள்ளைக்காரி பெரிதும் மகிழ்ந்து அவன் அருகில் வந்து தன் அழகுகள் அவன் மீது உராயும் வண்ணம் நெருங்கி நின்றாள். இதனால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி சிறு நிதானத்துடன் சற்று விலகி “தேவி இங்கு வந்திருக்கும் காரணம் யாதென அறியலாமா?” எனப் பெரும் சிரமத்தின் மத்தியில் வாயிலிருந்து சொற்களை உதிர்த்தான். “உன்னைப் பார்க்கத்தான்” என்ற வெள்ளைக்காரியின் உரையாடலில் கொஞ்சமும் மரியாதை இல்லாததை கவனித்த சங்கிலி உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “என்ன விடயம் தேவி?” “உன்னைப் பார்க்க வேண்டும் போலத் தோண்றியது, அது தான்..” என அவன் உடலுடன் மீண்டும் உராய்ந்தாள். என்ன செய்வதென்றறியாத சங்கிலி உணர்ச்சிகள் கட்டுமீறிப் போவதை உணர்ந்து கொண்டதுடன் தன்னைச் சமாளித்துக் கொண்டு “ ஏன் தேவி?” எனக் கேட்டான். அவன் தன்னை நிமிடத்துக்கு ஒரு தடவை ‘தேவி! ’ என்றழைப்பதை விரும்பாத அவள் “நீ என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம்” என்றாள். “முன் பின் தெரியாதவர்களை எவ்வாறு பெயர் சொல்லி அழைக்க முடியும்?” “பழகிக் கொள்” “எனக்கு உன் பெயர் தெரியாதே” எனச் சங்கிலியும் மரியாதையைக் கைவிட்டான். சற்று யோசித்த அவள் “ஓ! உனக்கு என் பெயர் தெரியாதல்லவா?” எனக் கேட்டாள். “ஆம்” “எலியானா” “நல்ல பெயர்” “நீ வேண்டுமானால் என்னை ‘எலி’ என சுருக்கியும் அழைக்கலாம்” “ஹா ஹா! அவ்வாறு கூப்பிட்டால் நம்மூரில் அசிங்கமாகிவிடும்.” என நகைப்புக்கிடையில் கூறினான். அவன் ஏன் நகைக்கின்றான் என்பதை அறியாத எலியானா, அவன் தோள் மீது தன் இரு கைகளையும் போட்டாள். “இது முறையல்ல..” என்றான் சங்கிலி. “எது?” “இவ்வாறு ஆடவர் மேல் கை போடுவது” “அதனாலென்ன?” “இல்லை! நான் திருமணம் ஆனவன்” “அதனால்…??” என குதர்க்கமாக பேசிய எலியானா “உன்னைப் போல் அழகனுக்கும் வீரனுக்கும் எங்களுரில் ஆயிரம் பெண்டாட்டிகள் இருப்பார்கள்” என்றாள். “இங்கு அவ்வாறில்லை” “உன்னை என்ன ஆயிரம் பெண்ணையா திருமணம் செய்யச் சொன்னேன். என்னை மட்டும் தானே? அதுவும் திருமணம் அல்ல.. சில நாட்கள் என்னுடன் சந்தோஷமாக இரு. பிறகு நான் எங்கள் ஊர் சென்று விடுவேன்” எனக் கூறினாள். “தப்பு” “எது?” “அப்படிச் செய்வது” “உங்கள் ஊர் அரசர்களும் அப்படித் தானே!” “நான் அவ்வாறல்ல…” வடிவழகி மீது கொண்ட தீராத காதலே தன்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கின்றது என்பதை உணர்ந்த சங்கிலி “ வடிவழகி மட்டும் இல்லையெனில், இப்பொழுது என்னவாயிருக்கும்” என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டான். தனக்கு மசியாமல் தன்னுள்ளேயே சிரித்துக் கொள்ளும் சங்கிலியைக் கண்ட எலியானா ஆத்திரத்துடன் அவனை இறுக அணைத்துக் அவன் இதழ்களுடன் தன் பூவிதழைப் பதித்தாள். திடீரென நடைபெற்ற இந்நிகழ்ச்சியால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி வெடுக்கென எலியானாவை பிடித்துத் தள்ளிவிட்டு அரண்மனை நோக்கிச் சென்றான். நிலத்தில் விழுந்த எலியானா “உன்னை அடையாமல் விடமாட்டேன்” என மனதில் கறுவிக்கொண்டாள். தன்னை வருங்காலத்தில் காப்பாற்றப் போகின்றவள் அவளென அறியாத சங்கிலி கோபத்துடன் அரண்மனை சென்ற போது அங்கு நண்பன் மாப்பாணன் ஒரு செய்தியுடன் காத்திருந்தான். சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 16- பறங்கிக் கோட்டை)

இளவேனிற் காலத்தின் சுகந்தவளி சுகமாக வீசிக் கொண்டிருந்த ஒரு பொழுது, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல நிகரற்ற சௌந்தர்யத்துடன் மலர்கள் மொட்டு விரித்து முறுவலித்துக் கொண்டிருந்தன. உதிர்ந்த மலர்களை மரகத வண்ணப் பசும்புல் தரை ஏந்தி தன் மடியில் கிடத்திக் கொண்டு தாய்மை எழிலுடன் காட்சி தந்தது. அவ்வற்புத அழகு இரகசியங்களை கவிதையாக்கி தம் தீங்குரலால் வானவர்க்குப் பாடிக் காட்ட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் நீல விண்ணின் விசும்பு மேல் ஏற முயன்று முயன்று தோல்லியடைந்து கொண்டிருந்தன சில வானம்பாடிகள்… இந்த அற்புதங்களையெல்லாம் தாங்கி வீராப்புடன் நிமிர்ந்து நின்றது யாழ் மண். வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற பறங்கியர்கள் தமது மரக்கலம் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தாம் கொண்டு வந்த பொருட்களை நகருக்குள் விற்றுச் சென்றனர். இவ்வாறே சில காலங்கள் சென்றன. பின் அவர்கள் தாம் தந்த வேலையைக் காட்டத் தொடங்கினர். பறங்கிய முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்த தளபதி பிரகன்சா அவர்களைப் பார்த்து “இப்பொழுது சங்கிலிக்கு எம்மீது பூரண நம்பிக்கை வந்துவிட்டது. இதனால் இனி நாம் வந்த வேலையைக் காட்டத் தொடங்கலாம்.” எனக் கூறினான். “அதற்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?” பறங்கிய முக்கிய தளபதிகளில் ஒருவனான தொன்பிலிப்பு கேட்டான். “நாம் மெதுவாக மரக்கலங்களை விட்டு நகருக்குள் காலூன்ற வேண்டும்” “முடியுமா?” “முயன்றால் முடியும். எம்மீது உள்ள நம்பிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சங்கிலியிடம் சென்று நமக்காக நிலம் கேட்க வேண்டும்.” “அவன் கடுமையானவனாயிற்றே! நமக்கு அனுமதி தருவானா?” “கேட்கின்ற விதத்தில் கேட்டால் நிச்சயம் தருவான். அந்த வேலையை நான் பார்த்துக் கொள்கின்றேன். நாம் முதலில் நல்ல ஒரு நாளில் சங்கிலியை சந்திக்க வேண்டும்” “வெறுங்கையுடன் சென்று சந்தித்தால் அவ்வளவு நல்லாயிராதே!” “அதற்கும் ஏற்பாடு செய்து விட்டேன். இந்தியாவிலிருந்து விலையுயர்ந்த திரவியங்களை இறக்குமதி செய்து விட்டேன்.” எனப் பெருமையுடன் கூறினான் பிரகன்சா. “அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. நாம் விரைவாகவே சங்கிலியைச் சந்திப்போம்” என்றான் தொன்பிலிப்பு. பறங்கிகள் தமக்குள் நடந்த ஆலோசனையின்படி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த பட்டாடைகள், பல வாசனைத்திரவியங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் சங்கிலியை கோட்டையில் வந்து சந்தித்தார்கள். “என்ன வீரர்களே! யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? ஏதாவது வசதிக்குறைவு ஏற்பட்டுவிட்டதா?” என வந்திருக்கும் பறங்கியர்களை ஒருமுறை அலசிப்பார்த்து கேட்டுக் கொண்டான். வந்திருந்தவர்களில் அன்று வந்த வெள்ளைக்காரியைக் காணாததால் சிறு ஏமாற்றத்துடன் சம்பாசனையைத் தொடர்ந்தான். “இல்லைப் பிரபு! உங்கள் உதவியால் நாம் பெரிதும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். உங்களுக்கு நிறையவே கடன் பட்டுள்ளோம். அதற்கான சிறிய உபகாரமாக நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை ஏற்க வேண்டும்” என பிரகன்ஸா கூறினான். அவன் வேண்டுகோளின் படி அப்பொருட்களை ஏற்றுக் கொண்ட சங்கிலி “உங்களுக்கு ஏதாவது குறை ஏற்படுமிடத்து தயங்காமல் என்னிடம் தெரிவியுங்கள்” எனக் கூறினான். நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பறங்கியத் தளபதி “மகாராசாவே! பகலெல்லாம் உணவின்றி நகருக்கு வந்து வர்த்தகம் செய்தவிட்டு இரவில் எங்கள் மரக்கலங்களுக்கு சென்று போசனஞ் செய்து நித்திரை கொள்கின்றோம். அது பெருங்கஷ்டமாகவே இருக்கின்றது. ஆதலால் நாம் கரையிலேயே ஒரு வீடு கட்டி அதிலிருந்து நகர்வந்து வர்த்தகம் செய்ய அனுமதி தரவேண்டும்” எனத் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டான். இவ்வேண்டுகோளைக் கேட்ட சங்கிலி தனது சந்தேகக் கண்களை தனது தளபதி மீது நாட்டினான். அவன் கண்களிலும் சஞ்சலம் நிறைந்திருப்பதைக் சங்கிலி கண்டான். இதனை அவதானித்த சபையிலிருந்த பரநிருபசிங்கன் “ சங்கிலி என்ன யோசிக்கின்றாய்? அவர்கள் கேட்பது நியாயம் தானே! பாவம்! அவர்களுக்கு இந்தச் சிறு உதவியையாவது செய்யாவிடின் நாம் மனித இனம் என்பதை வெளியில் கூறமுடியாது. இதற்கு அனுமதியை வழங்கு” எனக் கூறினான். “இல்லை அண்ணா!...” எனத் தொடங்கிய சங்கிலியின் வார்த்தையை இடைமறித்த மந்திரி அப்பாமுதலி “அண்ணா சொல்வது சரி, சங்கிலி அவர்களுக்கு அனுமதி வழங்கு” எனக் கூறினார். வேறு வழியில்லாது முதன் மந்திரி தனிநாயக முதலியும் சங்கிலியை அனுமதி வழங்குமாறு கூறினார். சபையினரது ஆலோசனைக்கு ஏற்ப சங்கிலியும் பறங்கியினருக்கு மிருகங்கள் சஞ்சரிக்கும் அடர்ந்த காடாயிருந்த பண்ணைக் கடலுக்கு சமீபமான நிலப்பரப்பை வழங்கினான். மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்ற பறங்கிகள் காடாயிருந்த அப்பிரதேசத்தை துரிதமாக துப்பரவு செய்து, வீடு கட்டுவது என்ற போர்வையில் மண்ணாலான சிறு கோட்டை ஒன்றைக் கட்டினார்கள். காலப்போக்கில் அதைப் பலப்படுத்திக் கொண்டார்கள். கோட்டையின் பாதுகாப்பிற்காக பெரிய அகழிகளைத் தோண்டினார்கள். அத்துடன் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், போதியளவு சேர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிலிருந்து படைவீரர்களையும் கடல் மார்க்கமாக வரவழைத்துக் கோட்டைக்குள் இருத்திக் கொண்டார்கள். இந்த நடவடிக்கைகள் சங்கிலிக்கு புலப்படாத வகையில் வழக்கம் போல நகருக்கு வந்து வர்த்தகம் செய்து வந்தார்கள். யாழ்ப்பாணம் எதிர்நோக்கியிருந்த பேரவலத்தை அறியாத சங்கிலி நிம்மதியாக யமுனா ஏரியின் அழகைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனை நோக்கி வந்தது பேரழகு அதிர்ச்சி. சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 15- பறங்கிகள் சந்திப்பு)

சங்கிலி, அப்பாமுதலியின் மகள் வடிவழகி மீது ஒரு கண்ணை வைத்திருப்பதை அறிந்த பரநிருபசிங்கன் பெரிதும் வெகுண்டான். “ இவனெல்லாம் ஒரு அரசனா? நல்ல படியாக ஆட்சி செய்வான் எனக்கருதி எனது அரசுரிமையை அவனிடம் ஒப்படைத்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டதே! எமது குலத்திற்கே அபகீர்த்தி தேடித்தரப் போகிறானே!” என்று கடுஞ்சினங் கொண்டு, ஊர்காவற்துறையில் அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்த காக்கைவன்னியனுக்கு ஒரு ஓலை எழுதி முத்திரையிட்டு தனது அந்தரங்கத்திற்கு பாத்திரமான ஒரு தூதனிடம் இரகசியமாகக் கொடுத்தனுப்பினான். ஏற்கனவே சங்கிலி மீது பகைபூண்டிருந்த காக்கைவன்னியன் பரநிருபசிங்கனின் தூதுவனை சிறப்பாக வரவேற்று அவன் கொணர்ந்த ஓலையை ஆவலாகப் பிரித்துப் படித்தான். அது கீழ்க் கண்டவாறு இருந்தது. காக்கைவன்னியனுக்கு, சங்கிலி முறைதவறி ஆட்சி நடத்துகின்றான். அவன் ஆட்சியில் மக்கள் சந்தோசமாகவே இல்லை. அவன் ஆட்சியை ஒழிக்க வேண்டும். ஆனால் அது கடினம். மந்திரிகளும் பிரதானிகளும் அவன் பக்கம் இருக்கின்றார்கள். நாட்டில் ஏற்பட்ட பல கலகங்களையும் அடக்கி விட்டான். ஆதலால் அவனை நானோ, நீயோ வெற்றி காண முடியாது. இதனால் நீ பறங்கிகள் உதவியை நாடு. விரைவாக இதற்கான முடிவைக்காண். பரநிருபசிங்கன். ஓலையைப் படித்த காக்கைவன்னியன் உடனடியாகவே பறங்கித் தளபதிகளை சந்திப்பதற்காக மரக்கலமேறித் தரங்கம்பாடியை அடைந்தான். அவனை வரவேற்ற பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன சகோதரரே! திடீர் விஜயம். ஏதேனும் எங்களால் ஆதாயம் கிடைக்க வேண்டுமா?” என்றான். “ஆதாயம் வேண்டும் தான். ஆனால் அதனால் என்னைவிட உங்களுக்கு தான் பயன் அதிகம்” என்றான் வன்னியன். “என்ன கூறுகிறாய்… எமக்கு ஆதாயமா?” “ஆம்…” “விளக்கிக் கூறு பார்ப்போம்” “நீங்கள் யாழ்ப்பாணம் மீது படையெடுத்து வரவேண்டும்” “வேண்டவே வேண்டாம். சங்கிலியைப் பற்றி எங்களுக்கு உன்னைவிட நிறையவே தெரியும். அவனை எதிர்க்க முடியாது. எங்களை நீ கட்டாயப்படுத்தாதே. எங்களுக்கு எங்கள் உயிர் முக்கியம். பேராசைப்பட நாம் தயாராக இல்லை” எனத் தீர்மானமாகக் கூறினான். “நீங்கள் நினைப்பது போலில்லை. அங்கு இப்பொழுது அவனுக்கு பல எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. அவன் அண்ணன் தான் எங்களுக்கு இந்த திட்டத்திற்கான அனுமதியையே தந்தான். உங்களுக்கு பல முனைகளில் ஆதரவு கிடைக்கும். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது” எனப் பறங்கியர்களின் மனதை மாற்றினான். இதனால் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரச் சம்மதித்தனர். “எப்பொழுது யாழ் வருவீர்கள்?” ஆவலுடன் வன்னியன் கேட்டான். “சீக்கிரமே புறப்பட்டு விடுவோம். எப்படியும் அடுத்தவாரமளவில் வருவதற்கு முயற்சிக்கின்றோம். சங்கிலி அண்ணனிடம் யாழில் எங்களுக்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தச் சொல்லு” என பிரகன்சா கூறினான். இந்த சந்தோச செய்தியை காக்கை வன்னியன் ஊர்காவற்துறை திரும்பிய உடனேயே ஒரு தூதுவனிடம் கூறி பரநிருபசிங்கனிடம் அனுப்பினான். திட்டமிட்டபடியே உரிய காலத்தில் பறங்கியர்கள் வர்த்தக வேடமிட்டு விநோத பண்டங்களுடன் பண்ணைத்துறையில் வந்திறங்கினார்கள். அவ்வாறே யாழ் கோட்டைக்கும் வந்து சங்கிலியைச் சந்தித்தான் பிரகன்சா. அவனுடன் பறங்கிகளின் உயர்மட்ட தலைவர்களும் வந்திருந்தனர். இவற்றைவிட பிரகன்சாவின் காதலியான ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் சங்கிலி அரசசபைக்கு வந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்களைக் கவர்ந்திழுக்கும் நீலக்கண்களுடனும், பொன்னிற முடியுடனும் காணப்பட்ட அவளைப்பார்த்த சங்கிலியே ஒருமுறை நிதானம் தவறிப்போனான். முழங்காலுக்கு மேல் தொடையின் அரைப்பகுதிவரை ஏறியிருந்த வெள்ளைநிறக் கவுனுடன் கழுத்திலிருந்து மார்புவரை அர்த்த சந்திர வடிவமாக வெட்டிவிடப்பட்ட கவுனின் மேற்பகுதியும், அறவே கைகளற்ற தோள்வரை மட்டுமே தழுவி நின்ற அந்தக்கவுனினால் அவளது திண்ணிய பருத்த மார்பகத்தின் பெரும்பகுதி வெளிப்படையாகவே தெரிந்தது. விலையுயர்ந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட சங்கிலியொன்று அவர் மார்பைத் தழுவியிருந்தது. இவற்றை ஓர் பார்வையிலேயே அளவெடுத்த சங்கிலி “இரத்தினத்திற்கு அடித்த யோகம்” என ஆதங்கத்துடன் மனதில் கூறியதோடு தன் மனதையும் திடப்படுத்திக் கொண்டான். பேச்சை ஆரம்பித்த பிரகன்சா, “ வணங்குகிறோம் பிரபு! உங்கள் நாட்டின் வளம் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வியாபாரம் செய்தால் நிறையச் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் இங்கு வந்து இறங்கினோம். நாங்கள் உங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய நீங்கள் அனுமதி தரவேண்டும்” எனக் கோரினான். அவனைக்கண்களாலேயே அளவெடுத்த சங்கிலி “ நீங்கள் கூறுவதை எவ்வாறு நம்புவது. வியாபார நோக்கோடு வந்த நீங்கள், உங்களை வளப்படுத்திய பிறகு எங்களுக்கு எதிராகத்திரும்புவீர்கள்” என தனது ஐயத்தைத் தெரிவித்தான். இதற்கிடையில் அவையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி! இவர்கள் மன்னாரில் வந்திறங்கிய பறங்கிகள் அல்ல. இவர்களது நோக்கமும் எங்களுக்கெதிரானது அல்ல. பாவம்! வயிற்றுப்பிழைப்புக்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா?” எனக் கூறினான். அப்பாமுதலியும் அவன் கூற்றை ஆதரித்தார். இதனால் மனம் மாறிய சங்கிலி பறங்கித் தளபதியைப் பார்த்து “நீங்கள் கூறவது உண்மையானால் பகற்காலத்தில் மட்டுமே, நகர்வந்து வியாபாரம் செய்ய வேண்டும். இரவில் மீண்டும் உங்கள் கூடாரங்களுக்கு திரும்பிவிட வேண்டும். இதற்குச் சம்மதமானால் எங்கள் நாட்டில் தங்குங்கள்” என்று கூறினான். அதற்கு உடன்பட்ட பறங்கிகள் அவ்வாறே செய்வதாகக் கூறிச்சென்றனர். பறங்கிகளுக்கும் தனக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தயின்போது அவர்களுடன் வந்திருந்த தங்க விக்கிரகம் தன்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்த சங்கிலி ஏக்கப்பெருமூச்சொன்றை வெளிவிட்டான். அண்ணன் பேச்சைக் கேட்டு பறங்கிகளை குடியமர்த்தியதன் விளைவை சிறிது காலத்திலேயே சங்கிலி உணர்ந்தான். அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கே வில்லங்கமாகிவிட்டது. சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 14 கலகங்கள்)

வாழ்க்கை என்பது ஒரு வட்டத்தைப் போன்றது. அதில் பருவகாலங்களைப் போல மாறி மாறி இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ஆனால் சங்கிலியின் வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளுமே நிறைந்திருந்தன. மந்திரி பிரதானிகள் சூழ சங்கிலி யாழ்ப்பாணப் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடலில் சபா மண்டபத்தில் ஈடுபட்டிருந்தான். தனிநாயக முதலியைப் பார்த்த சங்கிலி “என்ன முதன் மந்திரியாரே! நாடு சற்று குழப்பமடைந்து காணப்படுகின்றதே… என்ன நடக்கின்றது என்று சற்று விபரியுங்கள் பார்க்கலாம்” என்றான். “மறவன்புலவிலுள்ள மறவர்கள் அயற் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையிடுகின்றனர்” “என்ன? மறவன்புலவில் கொள்ளையா?... நம் ஆட்சியில் கொள்ளையா? ஏன் என் மக்களுக்கு என்ன குறை? ஏதற்காக அவர்கள் இப்படியொரு காரியம் செய்கின்றார்கள்”. “அரசே! அவர்கள் பரம்பரையினர் தென் இந்தியாவின் இராமநாத புரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உமது மூதாதையர் ஆட்சியில் இங்கு குடியேறினார்கள். இப்பொழுது நமது அரசிற்கு நாலாபக்கத்திலிருந்தும் பகை கிளம்புகின்றது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கலகம் விளைவிக்கும் நோக்குடன் சூறையாடல்களில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். அரசே, இவர்களை அடக்காவிடின் கொள்ளையும், களவும் குறைய மாட்டாது” என்றார் முதன்மந்திரி. சங்கிலி தனது தளபதியாரைப் பார்த்து “ தளபதி இதற்கொரு முடிவு கட்ட வேண்டும். இவ்விடயத்தை நீர் கவனித்துக் கொள்ளும்” என்றான். “ஆகட்டும் அரசே! சின்ன விடயம். எங்கள் வீரர்களை அனுப்பி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகின்றேன்” என்றான் இமையாணன். அதன்படி தளபதியின் கட்டளையின் பேரில் சென்ற வீரர்கள் சூறையாடல்களில் ஈடுபட்டிருந்த மறவர்களை சிறை செய்தனர். பயந்தோடிய மறவர்கள் காட்டுப்பகுதிகளில் ஒழிந்து கொண்டனர். இந்தக் காலப்பகுதிகளில் தொண்டைநாட்டிலிருந்து பன்னிரண்டு கருணீகரும் தம் குடும்பங்களுடன் வந்து யாழ்ப்பாணம் சேர்ந்தனர். இவர்கள் வருகை ஏதாவது சூழ்ச்சியுடன் இருக்குமோ என சங்கிலி ஐயப்பட்டான். அதனை தன் அரச சபைக்கும் தெரியப்படுத்தினான். “அரசே! அவர்கள் இயற்கையாகவே அறிவை நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் இங்கிருப்பதால் நமக்குத் தான் பெருமை. அவர்கள் இப்படியான சிறுமையான, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்” என எல்லோரும் ஆதரவு கூறினார்கள். அதன்படி அவர்களுக்கு காடாயிருந்த கரணவாய் எனும் பிரதேசத்தை சங்கிலி கொடுத்தான். அதனை அவர்கள் பண்படுத்தி நீண்ட காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள். இதன் பின்னர், சிறிது காலத்தில் வடமராட்சிப் பகுதியில் கலகம் ஏற்பட்டது. இது பற்றி சங்கிலி கேட்டறிந்த போது தனிநாயக முதலி கூறினார் “கோப்பாய் தலைமைக்காரனும், அவன் ஆட்களும் வடமராட்சி கோயில் திருவிழா ஒன்றிற்கு சவாரி வண்டியில் போயிருக்கிறார்கள். புறாப் பொறுக்கியில் சிறிது தங்கிய போது, அவ்வூர் சிறுவன் ஒருவன் வண்டி மாட்டின் குஞ்சத்தை கழற்றியிருக்கின்றான். இதனை அவதானித்த கோப்பாய் தலைமைக்காரன், சிறுவனைப்பிடித்து தண்டித்து அனுப்பிவிட்டான். அந்தச் சிறுவன் உடுப்பிட்டி தலைமைக்காரனது மகன். இதனால் ஆத்திரமடைந்த உடுப்பிட்டி தலைமைக்காரனும், அவனது ஆட்களும் சம்பவ இடத்திற்கு வந்து கோப்பாய் தலைமைக்காரனையும் அவனது ஆட்களையும் நையப்புடைத்து அனுப்பினர். இதனால் வெகுண்ட கோப்பாய் காரர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து மீண்டும் உடுப்பிட்டிக்காரரை பழிவாங்கினார்கள். இதனால் மீண்டும் மீண்டும் அவர்களுக்குள் கலகம் ஏற்படுகின்றது. இதனால் அந்தப்பகுதிகள் எதொடர்ந்தும் பதற்றமாகவே காணப்படுகின்றன.” “இரு தலைமைக்காரர்களையும் இங்கு வரவழைத்து விசாரிப்போமா?” என தளபதி இமையாணன் கேட்டான். “இல்லையில்லை, நானும் அங்கு அடிக்கடி செல்வதில்லை. இம்முறை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டு தீர்ப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன்” எனச் சங்கிலி கூறினான். அதற்கமைய வடமராட்சி சென்ற சங்கிலி, அங்கு மக்களுடன் கலந்தாலோசித்து நிலமைகளை சுமூகமாக்கிவிட்டு மீண்டும் யாழ் நோக்கி வந்தபோது, கள்ளியங்காட்டெல்லையில் அவன் வண்டி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சினமுற்ற சங்கிலி காரணம் என்னவென வினவினான். அங்கு நின்ற காவலர் தலைவன் “இது பரநிருபசிங்கன் எல்லை, அதுதான் நிறுத்தும்படியாயிற்று” என தாழ்ந்த குரலில் கூறினான். “எப்பொழுதிலிருந்து?” சங்கிலி வினவினான். பதில் கூறமுடியாது காவலர் தலைவன் திணறினான். பின் சங்கிலியை தொடர்ந்தும் தடுக்க முடியாது என்பதால் அங்கிருந்து செல்லுமாறு கூறினான். அப்பாமுதலியின் வாக்குப்படி சங்கிலி மீதிருந்த வெறுப்பினாலேயே பரநிருபசிங்கன் அப்படியொரு கட்டளையை இட்டிருந்தான். இந்த சம்பவங்களால் ஆத்திரடைந்த சங்கிலி அரண்மனை சென்றதும் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவது எனத் தீர்மானித்துக் கொண்டான். அரண்மனையில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடம்பெல்லாம் எரிந்தது. உள்வீட்டிலிருந்து இப்படியான எதிர்பை அவன் எதிர்பார்க்கவில்லை. மனமுடைந்த அவன் நல்லூர் வடக்கெல்லையில் உள்ள குடிசையொன்றில் தங்கி இளைப்பாறினான். மாலைவரை யாரும் அவனைத் தேடி வரவில்லை. இரவு நெருங்க வீரனொருவன் விளக்கை மட்டும் குடிசையில் வந்து வைத்துச் சென்றான். இரவு ஏறியதும் பாயை விரித்துப்படுத்த சங்கிலி சிறிது நேரத்தில் உறங்கி விட்டான். நள்ளிரவு வந்தது, அவன் எதையோ நினைத்துப் சற்றுப் புரண்டான். புரண்டவன் சட்டென்று மலைத்தான். எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால் அவனை எழுந்திருக்க விடாமல் அழுத்தின இரு பூங்கரங்கள். “நீ எப்பொழுது வந்தாய் வடிவழகி?” அவன் கைகள் அவள் பூவுடலை வளைத்தன. அவள் புஷ்பம் போன்ற கைகளாகிய மாலை அவன் கழுத்தைச் சுற்றிச் சுழன்றது. “இவ்விடம் உனக்கு எப்படித் தெரிந்தது?” “உங்கள் நண்பர் கூறினார்” “என்ன விடயத்திற்கு வந்தாய்?” “நீங்கள் அரசாங்க அலுவல்களில் மூழ்கியிருப்பதால் என்னை மறந்து விட்டீர்கள். ஆனால் இந்தப் பேதையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” எனக் கூறிய வடிவு, அவன் முரட்டு இதழ்களை தன் முல்லைப்பற்கள் இரண்டால் பற்றினாள். அவள் பூவுடல் வலிக்கும்படியாக சங்கிலி இறுக அணைத்துக் கொண்டான். அந்த வலியிலும் இன்பம் இருப்பதை உணர்ந்த வடிவழகி “ ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசக்காரர்” என்றாள். “எவ்விடயத்தில்?...” “பெண்கள் விடயத்தில்….” “ஏன்?...” “தனித்திருக்கும் பெண்ணை அணைக்கத்தான் தெரிகின்றது” எனக் கூறிய அவள் வெட்கத்தால் குனிந்தாள். அத்துடன் மல்லாந்து படுத்த நிலையில் ஒரு மோகப்புன்னகையில் சங்கிலியை பார்த்தாள். அப்புன்னகையில் அழைப்பிருந்தது. அந்த இன்பமயமான வேளையில் யாழ்ப்பாணத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய புயல் ஒன்று யாழ் கரையை வந்தடைந்தது.

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 13 நம்பிகள்)

நல்லூர் அரசிலே சிறப்புற்று விளங்கியது யாதெனில் சட்டநாதர் ஆலயத்திற்கு சற்றுத் தெற்காக வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட மந்திரிமனையாகும். இக்கட்டடத்தின் அமைப்பும், மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றன. அதில் நம் சுதேச மரபு கலந்திருந்தது. மந்நிதிமனைக்கு உள்ளிருந்து வெளியே யமுனா ஏரிக்கு வந்து சேரும் வகையில் மிக நுட்பமாக ஒரு சுரங்க வழி அமைக்கப்பட்டிருந்தது. இது நல்லூர்க் கோட்டைக்கு மிகவும் பாதுகாப்பாக விளங்கியது. சுரங்கவழியின் பாதுகாப்பையும் உறுதியையும் ஆராயவென தளபதி இமையாணனும், சங்கிலியும் சுரங்க வழிக்குள் இறங்கி நின்றனர். இந்த வேளையில் சங்கிலியைப் பல இடங்களில் தேடிய வீரமாப்பாணன், கடைசியாக சுரங்க வழிக்குள் வந்து சங்கிலியைச் சந்தித்தான். “என்ன மாப்பாணா! புரபரப்புடன் வருகின்றாய்? உன்னுடன் என்றுமே ஒரு தகவலைக்கூட வைத்திருப்பாயே! இன்று என்ன கூற வந்தாய்… என்னை எங்காவது கூட்டிக்கொண்டு போகப்போகின்றாயா? நான் பாதுகாப்புப் பற்றிய ஆலோசனைகளில் இருக்கின்றேன். நாளை போவோமா?” என மாப்பாணன் வந்த விடயத்தை தானாக ஊகித்துக் கூறினான். நிலமை தெரியாமல் சங்கிலி கூறியதைச் செவிமடுத்த தோழன் “நான் வந்திருக்கும் விடயம் சந்தோஷமானதல்ல, துக்கமானதாகும்” எனக் கூறினான். “என்ன! என்ன விடயம்?” சுதாகரித்துக் கொண்டான் சங்கிலி. “நம்மிடம் புதிதாக இணைந்த வன்னியன் இறந்துவிட்டான்”. “யார்… நம் தளபதிகளில் ஒருவனான கரைப்பிட்டி வன்னியனா?” “ஆம் அரசே!” “என்ன விடயம் என விசாரித்தாயா?” “இல்லை, ஆனால் அவன் கீழ் வேலை செய்யும் நம்பி ஒருவன் தான், அவனை யுத்த நெறிமுறைகளுக்கு புறம்பாகக் கொன்றான்”. “நம்பியா கொன்றான்! நம் படைத்தலைவன் என்று தெரிந்தும் நம்பிக்கு எவ்வாறு அவனைக் கொல்ல தைரியம் வந்தது” “தெரியவில்லை மன்னா!” சங்கிலி கோபம் கண்களில் கொப்பளிக்க தளபதி இமையாணனைப் பார்த்து “சங்கிலி படைத்தளபதி ஒருவனை அடிமை ஒருவன் சாய்த்து விட்டான். அவனுக்கு தக்க தண்டனையை நாம் வழங்க வேண்டும். நம்பரை வீரரை அனுப்பி அந்த நம்பியை கொல்லும் படி ஆணையிடு” எனக் கூறினான். “அரசே! எதையும் தீர விசாரித்து அறியாமல் ஒரு முடிவுக்கு வருவது தப்பு” என மாப்பாணன் ஆலோசனை கூறினான். ஆனால் ஏற்கனவே வெளிநாட்டவர் மீது ஆத்திரம் கொண்டிருந்த சங்கிலி அவனது ஆலோசணையை ஏற்கவில்லை. இதனால் அநியாயமாக ஒரு உயிரை எடுக்க வேண்டியதாயிற்று. சில நாட்களின் பின்பே உண்மை நிலையைச் சங்கிலி அறிந்தான். இதனால் பெரிதும் வருந்தினான். நம்பிகளுக்கு ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நம்பிகள் இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். சங்கிலியின் தண்டணையால் பெரிதும் மனமுடைந்த நம்பிகளில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலூன்றி பல சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்ததால் அந்த அனாதைச் சொத்துக்களை எல்லாம் அரச உடமை ஆக்கினான். தன் மனநிம்மதிக்காக பல ஆலயங்களில் விசேட பூஜைகள் பலவற்றை ஏற்பாடு செய்தான். தன் ஆத்திரப்புத்தியை மிகவும் நொந்து கொண்டு அந்தப்புரம் சென்றான். கவலைகளை மறக்கடிக்கும் அவ்விடமும் அவனுக்கு சுமையாகவே தோண்றியது. தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு பஞ்சணையில் உட்கார்ந்திருந்த மாதேவி, சங்கிலியைக் கண்டதும் வழக்கமான நாணத்துடன் பெரிய எதிர்பார்ப்புடனும் மெல்லிய திரைச்சீலையால் சுற்றவரக் கட்டப்பட்டிருந்த அந்தத் திரு மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தாள். சங்கிலியை கண்ட தோழிகள் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு மெதுவாக வெளியேறினார்கள். மஞ்சம் நோக்கி வந்த சங்கிலி பஞ்சணையில் இருந்த பைங்கிளியை ஏறெடுத்தும் நோக்காமல் பஞ்சணையின் ஒரு ஓரத்தில் இருந்தான். சங்கிலியின் கொஞ்சல்களையும், குழாவல்களையும் எதிர்பார்த்திருந்த மாதேவி சிறிது நேரம் எந்தவித சலனத்தையும் காணாததால் விரக்தியடைந்து, ஏமாற்றத்துடன் பஞ்சணை முகப்பிலிருந்த மெல்லிய திரையை விலக்கிக் கொண்டு தலையை நீட்டி “என்ன நடந்தது? ஏன் குழம்பிய மனத்துடன் காணப்படுகின்றீர்கள். வழமையாக நான் உங்களை இப்படிக் கண்டதே இல்லையே” என சோகமாக வறட்சியான குரலில் கூறினாள். அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்லாத சங்கிலி திரைகளுக்கு இடையே தெரிந்த அவள் சுந்தர முகத்தையும், விலகிய சேலையின் விளைவாக தெரிந்த மேல் அழகுகளையும் சில வினாடிகள் உற்று நோக்கினான். “இந்த சௌந்தர்யங்களையெல்லாம் ஆள இப்போது என்னால் இயலாது” என மனதுக்குள் சொல்லிக் கொண்டு பஞ்சணையை அணுகி மாதேவியை அப்படியே தனது கைகளில் அள்ளித் தூக்கித் தனது இதழ்களை முரட்டுத்தனமாக அவள் கழுத்தில் பதித்தான். அங்கிருந்து மீண்ட உதடுகள் அவள் செவ்விய அதரங்களுடன் ஒரு வினாடி இழைந்தது. அடுத்து எந்த சரசத்திலும் ஈடுபடாத சங்கிலி வெடுக்கென எழுந்திருந்தான். “தேவி! ஏன்னால் இன்று இன்பமாக இருக்க முடியாது. என் மனம் இன்று ஒரு நிலையில் இல்லை. சங்கடப்பட்டுக் காணப்படுகின்றது” எனக் கூறினான். தரையில் நின்றபடி அவன் உடல் மீது சாய்ந்து தனது உடலை அவன் உடலுடன் முற்றும் இழைத்துக் கொண்டாள் மாதேவி. அந்த ஒரு வினாடி அவன் மனதை மாற்றியது அந்த அணைப்பு. அவளை அணைத்துக் கொண்ட சங்கிலி “தேவி! என் அவசரப்புத்தியால் அநியாயமாக ஒரு உயிரைப்பறித்து விட்டேன்” என சோகமாகக் கூறினான். நடந்ததைக் கேட்டறிந்து கொண்ட பட்டத்து ராணி, அவனை ஆதரவாக அணைத்து அவன் மார்மேல் தலையைச் சாய்த்துக் கொண்டு “நீங்கள் என்ன தெரிந்தா இப்படிச்செய்தீர்கள். மேலே கடவுள் என்று ஒருவன் இருக்கி;ன்றான். அவனுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என அவன் மனப்பாரத்தை இறக்க முயன்றாள். ஆனால் சங்கிலி மனம் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அதற்குள் சங்கிலிக்கு சவால் விடும்படியாக உள்நாட்டில் சிக்கலான சூழ்நிலை உருவானது.

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 12 கரைப்பிட்டி வன்னியன்)

யாழ் நல்லூர்க் கோட்டை பகுதியெங்கும் மக்கள் சுறுசுறுப்புடன் இயங்கினர். சட்டநாதர் கோயிலும், வீராகாளியம்மன் கோயிலும் பக்தர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பல அரண்மனை வாசிகளும், அரச குடும்பங்களை சேர்ந்தவர்களும் இக்கோயிலை வழிபடுவர். இது தவிர யாழ் வீதிகளில் வீணாக பொழுதைப் போக்குபவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. எல்லோரும் சுறுசுறுப்புடன் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுவந்த கரைப்பிட்டி வன்னியன் ‘வாழ்ந்தால் இவ்வாறான ஒரு இடத்தில் தான் வாழவேண்டும்’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். கோட்டையை அண்மித்த வன்னியன் அதன் அழகைக் கண்டு சிறுவர்களைப்போல் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நின்றான். இந்தியக் கோட்டைகளைப்போல் எதிரிகளை இலகுவாகச் சமாளிக்கும் வகையில் மிக நுட்பமாக கட்டப்பட்டிருந்த நல்லூர்க் கோட்டையையும் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் ஜமுனா ஏரியின் அழகையும், அதன் குழுமையால் கோட்டையைச்சுற்றி வளர்ந்திருந்த மரஞ்செடி கொடிகளையும் கண்ட கரைப்பிட்டி வன்னியன் ‘யாழ் மக்கள் கலாரசனையுடையவர்கள் தான்’ என நினைத்தான். அந்தநேரத்தில் அவ்வழியால் வந்த வீரமாப்பாணன் கோட்டையையே துருவித்துருவி பார்க்கும் வன்னியனைக் கண்டதும் சந்தேகம் கொண்டு அவ்விடத்தில் பணியிலிருந்த காவலாளிகளிடம் கண்ணைக்காட்டினான். உடனே இருவர் ஓடிவந்து ஈட்டி முனையில் அவனைத் தடுத்து நிறுத்தினர். அந்த திடீர் கைதால் வெலவெலத்துப் போன கரைப்பிட்டி வன்னியன் மிரள மிரள விழித்தான். அவனிடம் வந்த மாப்பாணன் அவனை நோக்கி “யார் நீ எனக் கேட்டான்” . நடுங்கியபடியே “நான் வன்னியன், அரசவேலை தேடி இங்கே வந்தேன்” எனக் கூறினான். அவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாப்பாணன் அவனைக் கைது செய்து சங்கிலி இருக்குமிடம் கொண்டு சென்றான். சங்கிலி அந்தப்புரத்திலிருந்ததால் அவனை நந்தவனத்திற்கு வரும்படி மெய்க்காப்பாளனை மாப்பாணன் அனுப்பினான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சங்கிலி மாப்பாணனுடன் கூடவே ஒருவன் நிற்பதைக் கண்டு “என்ன மாப்பாணா! சிறிது காலம் நான் உன்னுடன் ஊர்சுற்ற வரவில்லை. அதற்குள் கோபம் கொண்டு நண்பனை மாற்றி விட்டாயே” எனச் செல்லமாகக் கடிந்து கொண்டான். “அவ்வாறில்லை அரசே! இவன் அரண்மனைக்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினான். விசாரித்ததில் இவன் வன்னியன், இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றான். பெயர் கரைப்பிட்டி வன்னியன் என்றும் அறியமுடிந்தது” என்றான். “ஓகோ! அப்படியா?” எனக் கூறிக்கொண்டு வன்னியன் மீது விழிகளை நாட்டி “நீ எப்பொழுது இங்கு வந்தாய்?” என சங்கிலி வினவினான். தனது நிலையை அழுகையுடன் ஒருவாறு கரைப்பிட்டி வன்னியன் கூறிமுடித்தான். அவன் கதையைக் கேட்ட சங்கிலி ஆதரவாக அவன் தோளைத்தட்டி “வீரனே! பயப்படாதே, அடைக்கலம் தேடிவந்தவரை காப்பது எம் கடமை. நான் உனக்கு அரண்மனையிலேயே வேலை ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றேன்”. எனக் கூறினான். இதைக்கேட்ட கரைப்பிட்டி வன்னியன் பெரிதும் சந்தோசமடைந்தான். மன்னனைத் தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டான். மன்னன் ஆணைப்படி கரைப்பிட்டி வன்னியனுக்கு சங்கிலி படையில் ஒரு பதவி வழங்கப்பட்டது. இந்த சம்பவங்களையெல்லாம் இருப்பிடம் சென்று தன் மனைவி அம்மை நாச்சியிடம் கூறிச் சந்தோசமடைந்தான் வன்னியன். நாட்கள் நகர்ந்து செல்ல கரைப்பிட்டி வன்னியன் மனதில் தீய எண்ணங்கள் குடிகொண்டது. தான் அரச பதவியில் இருந்ததால் அதைத் தவறாகப் பயன்படுத்த நினைத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துன்பங்களை விளைவித்தான். தன் கட்டளைக்குப் பணியாதவர்களை தண்டித்துவந்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களுடனும் தகாத முறையில் நடந்து கொண்டான். ஒருமுறை தன் சூழலில் வசித்து வந்த நம்பி ஒருவருடைய மகளின் அழகைக் கண்டு மயங்கி அவள் பின்னாலேயே அலைந்தான். அரசாங்கப் பதவியைக்காட்டி அவளை மயக்க முயன்றான். ஒன்றுக்குமே அவள் மசியாததால் தனது அதிகாரத்தைப் பாவித்து அவளை அச்சுறுத்தி வந்தான். அவள் பற்றிய தவல்களை அறிந்த போது அவள் தம் குலத்தில் ஒரு ஆடவனைக் காதலிப்ப தெரிய வந்தது. இதனால் வெகுண்ட வன்னியன், அவள் காதலனை அறிந்து, அவனைச்சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்தான். அவன் இருக்கும் நிலை பற்றி நம்பியின் மகளுக்குச் சொல்லியனுப்பினான். தன் காதலன் நிலையறிந்து, சொல்லமுடியாத கவலை அடைந்த அவள், ஓடோடி வன்னியன் சிறையிலிருந்த காதலனைக் கண்டாள். கடுமையாகத் தாக்கப்பட்டதால் நினைவிழந்து மயங்கிச் சரிந்த அவனைப் பார்த்து கதறியழுதாள். அவன் தலையைத்தூக்கி தன் மடியில் வைத்தாள். அவன் “தண்ணீர்! தண்ணீர்!” என முனகினான். அவ்வேளை அங்கு வந்த கரைப்பிட்டி வன்னியன், அவ்விடத்திலிருந்து நம்பி மகளை பலாத்காரமாகத் தூக்கிச் சென்று தன் பஞ்சணையில் எறிந்தான். கதறக்கதற அவள் கற்பைச் சூறையாடினான். நாயைப் போல கடித்துக்குதறி அவளைச் சின்னாபின்னமாக்கினான். பின் அவளையும், அவள் காதலனையும் அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டான். தள்ளாடித்தள்ளாடி இருவரும் தம்மிடம் வந்து சேர்ந்தனர். கற்பிழந்து உருக்குலைந்து தன் முன் வந்து நின்ற மகளைப்பார்த்த நம்பி, செய்வதறியாது பித்துப்பிடித்துப் போனார். இதற்கெல்லாம் காரணமான வன்னியனைப் பழிவாங்கியே தீருவது என்று சபதமெடுத்துக் கொண்டார். அரச பதவியில் இருக்கும் அவனைப் பழிவாங்குவது அவ்வளவு இலேசான காரியமல்ல என்பதை அறிந்த நம்பி, குறுக்கு வழியில் அவனைக் கொல்லத்திட்டமிட்டார். இதன்படி தனித்து வீடுவந்த கரைப்பிட்டி வன்னியனை நாள் பார்த்து முதுகில் குத்திக் கொன்றார். நடந்த சம்பவங்களை அறிந்த கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைநாச்சி அவமானம் தாங்கமுடியாமல் வாழ மனமற்று வாளால் வயிற்றில் குத்து தற்கொலை செய்து கொண்டாள். நடந்த விடயங்களை முழுமையாக அறியாத சங்கிலி தன் படையின் முக்கிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்து ஒரு கொடுங்காரியத்தைச் செய்து விட்டான். இதனால் அவன் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டியதாயிற்று. சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 11 - வன்னியர் வருகை)

சித்திரையில் சிறுமாரி எனக்கூறுவார்கள். காலையில் மழை வராது என நினைத்துக் கொண்டு தொழிலுக்கும், அன்றாட அலுவல்களுக்குமாக புறப்படுவோர் பிற்பகலில் பெய்யும் மழையால் வீடு திரும்பமுடியாது திணறிவிடுவார்கள். யாழில் அது நிலவி வருகின்றது. இந்தக்காலகட்டத்தில் பாண்டி நாட்டில் வன்னியர்கள் குழுவாக ஆலோசனைகளில் ஈடுபடுகின்றனர். ‘எமக்கு இங்கு இருப்பதினால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. நாம் யாழ்ப்பாணம் சென்றால் கை நிறையச் சம்பாதிக்கலாம். எம்மையும் வளர்த்துக் கொள்ளலாம்’ என நினைத்த அவர்கள் சில படகுகளில் யாழ்ப்பாணம் நோக்கி வர ஆயத்தமாகினர். அதன்படி இரு மரக்கலங்களைப் பெற்று, ஒன்றினுள் ஐம்பது வன்னியர்களும் இன்னொன்றில் அவர்கள் மனைவிமாரும் பிள்ளைகளும், நம்பிகளும் (ஆண்டிகளில் ஒரு சாதி) புறப்பட்டனர். இவர்கள் ஆயத்தமானபோதே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறப்பட்ட பயணத்தை தள்ளிப்போடுதல் அவ்வளவு அனுகூலமாக இருக்காது என்ற காரணத்தினால் பயணத்தைத் தொடர்ந்தனர். திடீரென கடல் கொந்தளிக்கத் தொடங்கியது. பேரலைகள் எழுந்து வீழ்ந்தன. சூறைக்காற்று சுற்றிச்சுற்றி சுழன்று அடித்தது. வன்னியர்களது மரக்கலங்கள் சிறியவை, ஆதலால் சூழலுக்கு எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. இரு மரக்கலங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டது. தமது கணவன்மார்களை பிரிந்திருந்த பெண்களும், தந்தையர்களை பிரிந்த குழந்தைகளும் “குய்யோ! முறையோ!” எனக் கத்திய சத்தம் கடலலைகளை ஊடறுத்து இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலித்தது. தமது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த வன்னியர்களில் சில துணிச்சலானவர்கள் கடலில் குதித்து பேரலைகளை எதிர்கொண்டு நீந்தினார்கள். சில பயந்த வன்னியர்கள் ஒன்றுமே செய்ய இயலாமல் கண்ணீர் வடித்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். ‘கடலில் குதிப்பொமா அல்லது மரக்கலத்திலேயே இருப்போமா?’ என நினைத்த வன்னியரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த வயதானவர்கள் “உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள், இனி அவன் விட்ட வழி தான்” என கூறினார்கள். இதேவேளை மற்றைய மரக்கலத்தில் இருந்தவர்களின் துயரத்திற்கு சொல்லி அளவில்லை. அங்கிருந்த நம்பிகள் குடும்பமாக இருந்ததினால் ‘வாழ்வோ, சாவோ! எதுவானாலும் எல்லோரும் ஒன்றாகவே முகங்கொடுப்போம்’ என்ற முடிவுடன் இருந்தனர். சில பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். “ ஐயோ!, உங்களைப் பிரிந்துவாழ எப்படித் தைரியம் வரும், புது இடத்தில் போய் எப்படி வாழமுடியும்.? உங்களுடன் மீண்டும் நாங்கள் சேராவிடின் குடும்பத்துடன் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம். இது கடற் கன்னி மீது சத்தியம்” எனக் கதறினார்கள். பிள்ளைகள் தாயின் சேலைகளைப் பிடித்துக் கொண்டு, “அம்மா அப்பா எங்கம்மா? அப்பா வருவாரா?” எனக் கண்ணீர் வடித்தார்கள். இவர்கள் எல்லோரையும் தாங்கிய மரக்கலம் நடுக்கடலில் நர்த்தனமாடியது. பல மணிநேர போராட்டத்தின் பின் இந்த மரக்கலமானது யாழ்ப்பாணத்தின் ஒரு கரையை வந்தடைந்தது. கரையில் இறங்கிய நம்பிகளும், பெண்களும், பிள்ளைகளும் செய்வதறியாது தவித்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சனநடமாட்டத்தையும், அவர்களது மற்றைய மரக்கலத்தையும் காணமுடியவில்லை. இதனால் சோகமே உருவாக என்ன செய்வதென்று அறியாது திறந்த வெளியில் இளைப்பாறினார்கள். அங்கு கிடைத்த காய்கனிகளை உண்டு தங்கள் பசியைப் போக்கினார்கள். இரண்டு நாட்களின் பின்னர் கடலில் குதித்து நீந்திய வன்னியன் ஒருவன் கரைவந்து சேர்ந்தான். அவனைக்கண்டதும் ஆவல் மேலிட கரையில் இருந்த அனைவரும் எழுந்து அவனை நோக்கி ஓடினார்கள். அந்த அதிஷ்டக்காரன் கரைப்பிட்டி வன்னியனே! அவன் வருகையைக் கண்ட அவன் மனைவி அம்மைநாச்சி பெரிதும் சந்தோஷமடைந்தாள். ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலைமை அவளுக்கு… மற்றயவர்களின் கதி..? ஆவனைச்சூழ்ந்து கொண்ட கூட்டத்திலிருந்து “என் கணவன் எங்கே? என் கணவனைக் கண்டீர்களா? என் அப்பா எங்கே?” என ஏகோபித்த குரலில் பலர் கேட்டனர். இதனால் ஏற்கனவே இளைத்திருந்த வன்னியன் மிகுந்த களைப்புற்றான். கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் அவனைச்சுற்றி நின்ற கும்பலை அகற்றிவிட்டு அவனுக்கு கிழங்கும் நீரும் கொடுத்தார். அதை அவன் ஆசையுடன் உண்டான். அதன் பின்னர் அவர் “தம்பீ! உன்னுடன் வந்தவர்கள் எங்கேயப்பா? அவர்களுக்கு என்ன நடந்தது?” என துக்கம் மேலிடக் கேட்டார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவ்வன்னியன், “ அந்த இக்கட்டான சூழ்நிலையில் பலர் கடலில் குதித்தனர். அவர்கள் தப்புவது மிகவும் கடினம். எஞ்சியவர்களும் ஒருவாறு தப்ப முயற்சி பண்ணிய போது ஒரு பேரலை எமது மரக்கலத்தை கவிழ்த்து சென்றது. இதனால் நாம் எல்லோரும் கடலில் தூக்கி வீசப்பட்டோம், கடலலைகளுக்குள் சிக்கித் திணறிய நான் ஒரு மரக்கட்டையின் உதவியுடன் ஒருவாறு நீந்திக் கரைசேர்ந்தேன். மற்றவர்கள் வருவதென்பது குதிரைக் கொம்பு தான்” எனக் கூறிமுடித்தான். அவனது கூற்றைச் செவிமடுத்த சிலர் மயங்கிச் சரிந்தனர். பலர் என்ன செய்வதென்று அறியாமல் மிரள மிரள விழித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதியில் தங்கிய வன்னியர்கள், அவ்விடம் அவர்கள் தொடர்ந்து வாழ தகுந்த இடமாக காணப்படாததால் குழுக்களாக வெளியேறத் தொடங்கினார்கள். அந்த ஒருமாத காலப்பகுதியில் கடலில் இருந்து எந்தவொரு வன்னியனும் மீண்டுவரவில்லை. இதனால் அவர்கள் இறந்தவர்களே எனத் தீர்மானித்து மிகுதியானவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். அந்தவகையில் கரைப்பிட்டி வன்னியனும் அவன் மனைவியும் சில நம்பிகளும் கந்தரோடை எனும் இடத்தில் தங்கினார்கள். கரைப்பிட்டி வன்னியன் அரண்மனை சென்று ஏதாவது வேலை வாங்கலாம் என்ற எண்ணத்தில் நல்லூர் பகுதியை நோக்கிப் புறப்பட்டான். சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 10 – பறங்கியர் படையெடுப்பு)

பொற்பழம் போலிருந்த சூரியன் அக்கினிக் கனியெனச் சிவந்து அடிவான மடியில் அவரோகணமாகிக் கொண்டிருந்தான். ஒளிவற்றிச் சுருண்டு மிக லேசான இருள் தூற்றலிடத் தொடங்கும் வேளை அண்மித்துவிட்டது. இந்த மாலைவேளையிலும் அவசர அவசரமாக அரச சபையை கூட்டவேண்டியதாயிற்று சங்கிலிக்கு. அந்த அவசரத்திற்கு காரணம் ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி. பறங்கிகள் படையொன்று யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுத்து வருவதா, இதனால் அரசசபையில் அன்று அனைத்துத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். லஸ்தர் விளக்குகளினாலும் மெழுகுவர்த்திகளாலும் வெளிச்சமூட்டப்பட்ட அந்த சபா மண்டபம், தேவர் சபைபோலக் காட்சியளித்தது. வேகமாகச் சங்கிலி அவையினுள் பிரவேசித்தான். எல்லோரும் எழுந்து வணக்கம் செலுத்திவிட்டு அவன் அரசுக்கட்டிலில் அமர்ந்ததும் அமர்ந்தனர். சபையில் உள்ளோரைப்பார்த்து சங்கிலியே பேச்சைத் தொடங்கினான். “பறங்கிகள் பெரும்படையுடன் யாழ்நோக்கி வருகின்றார்கள். நான் போருக்கு அஞ்சுவதில்லை. ஆனால் நாட்டு நலனுக்கு ஏற்ப உங்களுடனும் கலந்தாலோசிப்பதற்காக சபையைக் கூட்டியுள்ளேன். நாம் இப்போது வேண்டுமானாலும் போருக்கு புறப்படலாம். ஆனால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எமது படையை என்றுமே தயாராக வைத்திருக்கின்றார் நம் தளபதி இமையாணன்” என்றான். இதைக்கேட்ட முதன் மந்திரி தனிநாயக முதலி எழுந்து “மகாராஜா! பறங்கிகளுடன் போர் செய்வதற்கு முன் நாம் யோசித்துத் தொடங்குதல் சிறந்ததாகும். அவர்கள் தென்பகுதியிலும், இந்தியாவிலும் மிகுந்த பலத்துடன் இருக்கின்றார்கள்.” எனக் கூறினார். இதனை அவைக்களத்துப் புலவரும், மந்திரி அடியார்க்கு நல்லானும் ஆமோதித்தனர். அத்துடன் நல்லான் எழுந்து “ அரசே! பறங்கியருடன் போரிடுவதற்கு முன்னர் நாம் சில உபாயங்களைச் செய்தல் வேண்டும். அவர்களுக்கு எல்லா திசைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.” “என்ன செய்யலாம் கூறுங்கள்” சங்கிலி வினவினான் தளபதி இமையாணன் எழுந்து “அரசே! வடக்கே தஞ்சை நாயக்கருக்கு ஓலை அனுப்பி அவர்களோடு சண்டையிட ஏற்பாடு செய்ய வேண்டும். கள்ளிக்கோட்டை சமோரினையும் அவ்வாறே பறங்கியருக்கு எதிராக போரிடுமாறு தூண்ட வேண்டும். தெற்கே கோட்டை இராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்டார்கள். அங்கே நீர்கொழும்பு, சிலாபம் முதலிய பகுதிகளில் உள்ள மக்களை பறங்கியருக்கு எதிராக கலகம் பண்ணும்படி தூண்டிவிடலாம். பறங்கியரை திணறச்செய்வதற்கு இவை நல்ல உபாயங்கள்” எனக் கூறினான். இதுவரை பேசாதிருந்த அப்பாமுதலி “அரசே! பறங்கியருக்கு மாறாக இவ்வளவு நடவடிக்கைகள் வேண்டுமா? அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இங்கு வியாபாரம் நடத்த வருகின்றார்களாக்கும். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா? நாம் அவர்களை வாழவைக்க வேண்டும். அந்தப் பெருமை எதிர்காலத்தில் உங்களையே வந்துசேரும்” என தன் போலி அனுதாபத்தைக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலி இறுதியாகத் தீர்மானமாக எல்லோரையும் பார்த்துக் கூறினான் “நான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன், நான் போருக்கு அஞ்சவில்லை. அதனால் நாட்டுமக்கள் படும் துன்பத்தை நீக்க வேண்டும். எனவே எதற்கும் ஒருமுறை பறங்கித்தளபதிகளுக்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக போரைத்தவிர்க்கும் விதமாக தூதொன்றினை அனுப்பிப் பார்ப்போம்” எனக் கூறியதுடன் ஒரு மூலையில் இருந்த தன் நண்பனைப்பார்த்து “மாப்பாணா! நீதான் இதற்குப் பொருத்தமானவன். உடனே சென்று எனது விருப்பத்தை அவர்களுக்கு தெரிவித்து வா” எனக் கூறினான். அதன்படி வீரமாப்பாணனும் மன்னாருக்கு அருகில் உள்ள தீவுகளில் முகாமிட்டிருந்த பறங்கியத்தளபதிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் சங்கிலியை வந்து சந்தித்தான். “என்ன மாப்பாணா! போன காரியம் எவ்வாறு முடிந்தது” சங்கிலி வினவினான். “வெற்றி தான், ஆனால் நாம் எமது பொக்கிஷத்தின் சிறுபகுதியை இழக்க வேண்டிவரும்” என்று கூறினான். “பூ! இவ்வளவு தானா? மனித உயிருடன் ஒப்பிடும் போது இது எவ்வளவு அற்பமானது” எனக் கூறி ஒரு தொகை திரவியங்களை அரச கஜானாவில் இருந்து படைவீரர்கள் மூலம் பறங்கிகளுக்கு கொடுத்தனுப்பினான். அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோர் ஒரு குடையின் கீழ் சங்கிலியின் ஆட்சியில் குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்தனர். அடிக்கடி யாழ்ப்பாணத்தைச் சூழும் போர் மேகங்களால் பெரிதும் கவலையுற்ற சங்கிலி, இவர்களை இங்கு வைத்திருப்பது சிரமம் என யோசித்தான். அதை அரசசபையிலும் தெரிவித்தான். அதற்கு பலபேர் வரவேற்புத் தெரிவித்தனர். முதன் மந்திரி தனிநாயகமுதலி “அரசே! இவர்களது சனத்தொகை பெருகும் போது பறங்கிகள் போல் இவர்களும் எமக்கெதிராக போருக்கு எழுவார்கள். உள்நாட்டுப்போர் வெளிநாட்டுப் போரிலும் மிகக் கொடியது. இதனால் பல உயிர்சேதம் ஏற்படும்” என தன் ஐயத்தைத் தெரிவித்தார். அரசகேசரியும் “ இவர்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தையே பிடிக்கக் கூடியவர்கள். இவர்களால் நாம் பரதேசிகளாக வாழவேண்டி நேரிடலாம்” எனக் கூறினார். அடியார்க்கு நல்லான் “மன்னா! அவர்களுக்கென்று சொந்த இடங்கள் இருக்கின்றது. இதனால் அவர்களை இங்கிருந்து வெளியேற்றினாலும்; பெரிதாகக் கஷ்டப்படமாட்டார்கள். நாட்டு நன்மை கருதி அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதே சிறந்த முடிவாகும்” எனக் கூறினான். எல்லோரது ஆலோசனைகளையும் ஏற்ற சங்கிலி சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோரை எந்தவித சேதமும் இல்லாமல் அவர்கள் சொந்தப்பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தான். இந்த சமயத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஒரு அபாயம் யாழ் நோக்கி வந்துகொண்டிருந்தது.

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 9 – சவேரியர்)

நிலம் குழைய, குளம் வழிய நல்ல மழை யாழில் பெய்து ஓய்ந்தது. மேற்றிசை வான்சரிவில் ஏழ்வண்ண வில்லோவியம் எழுந்து நின்றது. வானத்தில் நிற முகில்கள் பல்வேறு சித்திரங்களாக வடிவெடுத்து நின்றன. தன்னை நோக்கி வந்த வீரமாப்பாணனை எதிர்கொண்டு வரவேற்ற சங்கிலி “நல்ல சமயத்தில் தான் வந்தாய் தோழா! உன்னிடம் ஓர் ஆலோசனை கேட்க வேண்டும்.” “என்ன விடயமாக?” “வடிவழகிக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு பற்றி தேவிக்கு சிறிது சந்தேகம் வந்திருக்கின்றது. இதற்கு என்ன செய்யலாம்” “அதைத் தக்க தருணம் வரும் போது கூறிச் சமாளித்துக் கொள்ளலாம். இப்பொழுது வேறொரு பணி வந்துவிட்டது” “என்ன அது?” “சவேரியர் உன்னைக்காண வந்திருக்கின்றார்” “யாரவர் சவேரியர்?” விளக்கினான் நண்பன். ****************************************************************** மன்னாரில் அறுநூறு பேருக்கு சிரச்சேதம் செய்ததால் அங்கு மதத்தைப் பரப்பிக் கொண்டிருந்த கிறிஸ்தவ குருவானவர் தப்பிக் கோவைக்குச் சென்றதை முன்னைய அத்தியாயம் ஒன்றில் வாசித்திருப்பீர்கள். அவர் நேரடியாக அங்குள்ள பிரதம குருவான சவேரியரிடம் சென்றார். “என்ன சிஷ்யா! திடீரென மன்னாரிலிருந்து இங்கு வந்து நிற்கிறாய். அங்கு எல்லோரையும் எங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டாயா?” சவேரியர் வினவினார். “குருவே! எங்கள் திட்டத்தில் எல்லாம் இடிவிழுந்து விட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புயல்போல ஒரு அரசன் கிளம்பி வந்து மதம் மாறுவோரைத் தண்டித்தான். எதிர்த்த அறுநூறு பேருக்கு எந்தவிதக் கருணையும் காட்டாமல் சிரசைக் கொய்ய ஆணையிட்டான். அவன் தீவிர மதப்பற்றுடையவனாகத் தெரிகின்றான். அவன் இடத்தில் எங்கள் விளையாட்டுக்கள் எதுவும் பலிக்காது போலிருக்கின்றது.” எனப் பரிதாபமாகக் கூறினார். “ஓ! அப்படியா? சங்கதி, அதை நானும் ஒருமுறை பார்க்கின்றேன்.” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு மன்னார் வருவதற்கு ஆயத்தமானார். அதன்படி மன்னாரிலும் வந்திறங்கினார். அங்கு மதத்தைப்பரப்புவதற்காக மக்களைச் சந்தித்தார். அதற்காக சில சலுகைகளையும் வெளியிட்டார். “மகா சனங்களே! நீங்கள் எல்லோரும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கும் வருட வருமானத்தின் ஐந்து மடங்கை நாம் இனாமாகத் தருகின்றோம். உங்களை உயர் ராஜாங்க உத்தியோகங்களில் அமர்த்துகின்றோம். அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசதிகளைப் பெற்றுத் தருகின்றோம்” என இவ்வாறான பல சலுகைகளை அறிவித்திருந்தார். மக்கள் எவருமே அதற்குச் செவிசாய்க்கவில்லை. சங்கிலியின் குணம் தெரிந்திருந்ததால் அவன் ஆணையைக் கடக்க எவரும் விரும்பவில்லை. இதனால் மன்னாரில் நின்று பயனில்லை என அறிந்த சவேரியர் 1548 இல் சங்கிலியை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார். ****************************************************************** அந்தவகையில் சவேரியரை ஒரு வெளிநாட்டுத் தூதர், அத்துடன் ஒரு மதகுரு என்ற வகையில் சிறந்த அரச மரியாதையுடன் வரவேற்று கோட்டை அரச சபா மண்டபத்தில் சங்கிலி சந்தித்தான். “வணங்குகின்றேன் அரசே! உன் புகழ் கடல் தாண்டி இந்தியாவிலும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வளவு வீரம் படைக்கப்பெற்ற நீ பறங்கி அரசர்களோடு நல்லுறவை வைத்துக் கொண்டால், உனக்கும் உன் நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்குமே!” என ஆசை வார்த்தை கூறினார் சவேரியர். ஆனால் இதற்கெல்லாம் மயங்குகின்றவனா நம்மன்னன் சங்கிலி. சவேரியரது உள் நோக்கங்களைப்புரிந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் “ஆம் அவ்வாறே செய்யலாமே! ” எனக் கூறினான். அதன்படி ஒரு ஒற்றனை அனுப்பி கோவையில் இருக்கும் அரசனுடன் கதைத்து அவன் விரப்பத்தைக் கேட்டு வரும்படி கூறினார் குருவானவர். அதற்கேற்ப சங்கிலியும் தன் அந்தரங்க தூதுவனொருவனை கோவைக்கு அனுப்பி வைத்தான். அதன்படி அவன் வரும்வரை சவேரியரை பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திலேயே தங்க வைத்துக் கொண்டான். போன தூதனும் சில நாட்களில் கோவை பறங்கி அரசனது தகவலுடன் யாழ் வந்து சேர்ந்தான். அரச சபையிலே அரசனைச் சந்தித்து கோவை அரசன் நம நட்பை ஏற்றதாகவும் அதற்கு அடையாளமாக சில நினைவுச்சின்னங்களையும் அரசனுக்கு ஒரு நட்பு ஓலையையும் தந்ததாகக் கூறினான். இவ்வாறு சில நாட்கள் அமைதியாக ஓடின. ஒருநாள் சங்கிலியைச் சந்தித்த சவேரியர் மெல்ல தன் எண்ணத்தைத் தெரிவித்தார். “அரசே! என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சேர்த்து நாங்கள் நிறைய ஆட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளோம்.” “அது தெரியும் தானே” “இல்லை எங்களுக்கு…” “என்ன ஏதாவது குறைபாடா? அரச ஊழியர்கள் உங்களைச் சரிவரக் கவனிப்பதில்லையா? அவர்களைத் தண்டிக்கட்டுமா?” “இல்லை அரசே! நாங்கள் வழிபடுவதற்கு இங்கு எங்களுக்கு தெய்வம் இல்லையே” “இதில் என்ன வருத்தம் கடவுள் ஒருவர் தானே! நீங்கள் மானசீகமாக மனதால் வழிபட்டாலே போதுமே!” எனக் கூறினான். “அப்படியல்ல, எமக்கு இங்கு வழிபட ஒரு கோயில் அமைக்க இடம் தாருங்கள். அதற்கான செலவை நாம் தந்துவிடுகின்றோம்”. என சவேரியர் கூறினார். சவேரியரது உள் நோக்கங்களைப் புரிந்து கொண்ட சங்கிலி இப்பொழுது இவர்கள் கோயில் அமைக்க இடம் கேட்பார்கள். காலப்போக்கில் எங்கள் கோயில்களையும் அழித்துவிடுவார்கள் என தனக்குள் நினைத்துக் கொண்டான். “நான் ஆரம்பத்திலேயே நினைத்தேன். என்ன இன்னும் நமக்கு இவர்கள் தொல்லை தரவில்லையே என்று? இப்பொழுது புரிகின்றது உங்கள் உள் நோக்கங்கள். இனி உங்களை இங்கே வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டி வைத்திப்பது போன்றது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லலாம். வந்தோரை வரவேற்பது தமிழர் பண்பு. நாம் வரவேற்றோம். ஆனால் உங்கள் கபட நாடகத்திற்கு இங்கு இடமில்லை. நீங்கள் புறப்படலாம்” என கடுமையாக உத்தரவிட்டான். இனித்தன் தந்திரங்கள் பலிக்காது என அறிந்த சவேரியர் அவ்வளவில் மனம் சலித்து யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சீன தேசம் சென்றார். ஒரு அழிவில் இருந்து மீண்ட யாழ்மக்களை சிறிது காலத்தில் மாபெரும் அழிவுக்கான ஆயத்தங்கள் சூழ்ந்தன. இதிலிருந்து யாழ்ப்பாண மக்களைக் காப்பாற்ற சங்கிலி பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 8 – திண்டாட்டம்)

சங்கிலியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பட்டத்து இளம்ராணி இராசமாதேவி சங்கிலியை கண்காணிக்க ஒரு ஒற்றனை ஏற்பாடு செய்திருந்தாள். அந்த மற்றைய சோடி கண்களுக்குரியவன் அவனே. அவன் நேராக இராசமாதேவி இருந்த நந்தவனத்திற்கு வந்தான். அங்கே இராசமாதேவியும் தோழி அங்கயற்கன்னியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்து தான் ண்ட விடயத்தைக் கூறிப்போனான். இதைக்கேட்ட இராசமாதேவியின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது. “பார்த்தாயா அங்கயற்கன்னி! அரசாங்க அலுவல் என அடிக்கடி கூறிக்கொண்டு சோழியர்புரம் பகுதி சென்று என்ன அலுவலைக் கவனித்திருக்கின்றார் என்று” தனது ஆதங்கத்தை நண்பியுடன் பகிர்ந்து கொண்டாள். “தேவி! நாம் தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வர இயலாது. ஆரசர் நல்லவர், ரொம்பக் கெட்டித்தனமுடையவர்” என்று கூறினாள் தோழி. “பிற பெண்களை விரும்புவதிலும் அவர் கெட்டிக்காரர் தான்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் மாதேவி. “பெண்களை என்று ஏன் பொதுவாகச் சொல்கிறீர்கள், வடிவழகி ஒருத்தியைத் தானே!” “சாட்சியுடன் இருப்பது இது ஒன்று, சாட்சியில்லாமல் எத்தனை காரியங்கள் நடந்தனவோ? யாரரிவார்?. அரசர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒன்றனை என்னால் அனுப்ப முடியுமா? அது தர்மமாகுமா?” “விடுங்கள், அரசர் அப்படிச் செய்யக்கூடிய ஆளில்லை. அவர் மேல் குற்றம் கூறமுடியாது. அவருக்கு இடம் கொடுத்த வடிவழகியைத் தான் குற்றம் கூறவேண்டும், அரசர் கல்யாணமானவர் என்று தெரிந்துமா அவள் காதலிக்கத் துணிந்தாள்.” என்று சமாதானம் கூற முயன்றாள் தோழி. “அவள் கூடாதவள் என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே” “அப்படியெல்லாம் கூறமுடியாது. எல்லோரும் நல்லவர் போல் தான் நடிப்பார்கள். தக்க சமயம் வரும்போது தான் அவர்களது சுயரூபம் வெளிப்படும். ஆசைக்கும் அளவு இருக்க வேண்டும். கட்டிய மனைவி இருப்பது தெரிந்தும் ஓர் ஆடவனை வேறொரு பெண் காதலிக்கலாமா? இது தமிழர் பண்பாடாகுமா?” என பிரசங்கம் செய்தாள் அங்கயற்கன்னி. “சரி இதைப்பற்றி பேசிப்பயன் என்ன? எல்லாம் ஆண்டவன் விட்ட வழிப்படி நடக்கட்டும். இருட்டுகின்றது நீ போய் வா! நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நாளை உன்னை மீண்டும் சந்திக்கின்றேன்.” எனக் கூறிக்கொண்டு இராசமாதேவி நேராக மன்னன் பள்ளியறை நோக்கிச் சென்று பஞ்சணையில் தொப்பென்று விழுந்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு சங்கிலி தன் படுக்கையறை நோக்கி வந்தான். அரசன் வருவதை அறிந்த தேவி விருட்டென எழுந்து பஞ்சனையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தலையை மறுபுறம் திருப்பி வைத்துக் கொண்டாள். அறைக்குள் நுழைந்த சங்கிலி இடுப்பிலிருந்த உடைவாளைக் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு மேலங்கியையும் கழற்றி வைத்துவிட்டு பஞ்சணையில் திரும்பியிருந்த தேவியைப் பார்த்தான். இதுவரை வெளியில் எடுக்கப்படாதிருந்த வெண்பட்டு, மலரிலும் மென்மையான அவள் உடலை ஆசையுடன் தழுவி நின்றது. மார்பில் தொங்கிய கெம்புக்கல்லும் அவள் தலையில் செருகியிருந்த ரோஜாப்பூவும் அந்த வெண்பட்டுக்கு மாற்று வர்ணங்களாக அமைந்தன. சிலகணம் அவள் அழகைப்பருகிய சங்கிலி மெதுவாக அவள் பின்புறமாக வந்து அவளுக்குப் பின்னால் அமர்ந்து தனது வலது கையால் அவள் இடையைச் சுற்றிப்பிடித்தான். வெடுக்கென அவன் பிடியிலிருந்து விலகி மாதேவி எழுந்து நின்றாள். இதைச்சற்றும் எதிர்பார்க்காத சங்கிலி “மகாராணிக்கு என் மேல் கோபம் போலிருக்கின்றதே” என யாதும் அறியாதவனாய்க் கேட்டான். “நீங்கள் செய்த செயலுக்கு உங்களை கட்டியணைத்து முத்தமிடவா முடியும்?” என முகத்தைத் திருப்பாமலே கேட்டாள். “ஏன் நான் என்ன தப்புச் செய்து விட்டேன்? ” “சோழியர்புர பகுதிக்கு ஏன் அடிக்கடி செல்கிறீர்கள்” “அரசாங்க அலுவலாக…” “அரசாங்க அலுவலா? அல்லது அப்பாமுதலியின் மகளா?” நடந்த விடயங்கள் எவ்வாறோ இவளுக்கு தெரிந்துவிட்டது. இனி கெஞ்சுவதைத் தவிர வழியில்லை என நினைத்துக் கொண்டான் சங்கிலி. ஒரு ஆண் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் தன்னை விடுத்து வேறொரு பெண்மீது தன் கணவன் நாட்டங்கொண்டிருக்கின்றான் என்பதை எந்தப்பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டாள். பஞ்சணையில் இருந்து எழுந்து வந்த சங்கிலி மீண்டும் அவளை அணைத்து அவள் முகவாயைப்பிடித்து தன்னை நோக்கித் திருப்பி, உண்மையை மறைத்து “நீ நம்புகிறாயா?” என ஒரு கேள்வியைக் கேட்டு அவள் இதழில் தன் இதழை ஆழமாகப்பதித்தான். இங்கு தான் இருக்கின்றது பெண்களின் பலவீனம். சற்று நேர இன்பத்தால் திக்குமுக்காடிப்போன தேவி கொஞ்சம் மனம் கனிந்து அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விம்மத் தொடங்கினாள். அவளை மெதுவாகப் பஞ்சணையில் அமர வைத்த சங்கிலி அவள் குழல்களை ஆதரவாகத் தடவினான். கணவனது நெருக்கத்தால் பெரிதும் மகிழ்ந்து எல்லாவற்றையும் மறந்து கணவனுக்கு கீழ்ப்படிகின்ற குணம் மட்டும் பெண்களுக்கு இல்லையானால் அன்று சங்கிலி தப்புவது பெருந்திண்டாட்டமாய் போயிருக்கும். சிறிது நேரத்தின் பின் புன்றுவல் பூத்தாள் மாதேவி. “ஏன் நகைக்கிறாய் தேவி?” என வினவிய சங்கிலி அவள் கைகளை நன்றாக அழுத்திக் கொடுத்தான். “ஒன்றுமில்லை” என்ற அவள் சற்றே அசைந்தாள். “பின் ஏன் நகைக்கிறாய்?” “நகைக்கக் கூடாதா?” “கூடாது” “நகைத்தால் என்ன செய்வீர்கள்?” “கன்னங்களைத் திருகி விடுவேன்” “திருகுங்கள் பார்ப்போம்” அவன் கன்னத்தில் கைவிரல்கள் இரண்டை வைத்து அழுத்தினான். அவள் மேலும் நகைத்தாள். “இன்னும் உறைக்கவில்லையா?” “இல்லை” “இன்னும் அழுத்திக்கிள்ளுவேன்” “கிள்ளுங்கள்” அவன் அவள் கன்னத்தை சற்று அழுத்தியே கிள்ளினான். அவள் பதிலுக்கு அவனுடன் அதிகமாகவே இழைந்தாள். “என்ன இவ்வளவு தான் கிள்ளுவீர்களா?” என்று கேட்டாள். அவன் அவள் கன்னத்தை திரும்பிப் பார்த்தான். கிள்ளிய இடம் சற்று சிவந்திருந்தது. “சே! சற்று அழுத்திக் கிள்ளிவிட்டேன்” என்று வருந்தினான் சங்கிலி. “பின் பொய்யாகவா கிள்ளுவீர்கள்” “அப்படித்தான் கிள்ள நினைத்தேன்” “அதிலென்ன பிரயோசனம்” “வலிக்கக் கிள்ளினால் தான் உனக்குப் பிடிக்குமா?” “ஆம்” “ஏன்?” “கணவன் கணவனாக இருக்க வேண்டும். கணவன் மனைவியை அடிப்பதும் இன்பம், கிள்ளுவதும் இன்பம், அணைப்பதும் இன்பம்” “தூங்கு தேவி” உடலைத்தடவினான். “தூக்கம் வரவில்லை” “எனக்கு மட்டும் வருமா தேவி?” “எது?” “தூக்கம்” இந்தப்பதிலை கேட்ட தேவி மெல்ல நகைத்தாள். இரகசியமாக “உம் வராது… வராது” எனச் சொன்னாள். அவள் சொற்களில் குழைவிருந்தது. அடுத்து வந்த ஆனந்தத்தில் நிறைவிருந்தது. மறுநாள் ஓர் அவசர செய்தியுடன் சங்கிலியைத் தேடி நண்பன் வீரமாப்பாணன் வந்தான். சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 7 – கண்டிப்பு)

அந்த இருசோடி கண்களில் ஒருசோடி கண்களுக்குரியவர் வேறு யாருமல்ல, வடிவழகியின் தந்தை அப்பாமுதலி தான். இவ்விடயத்தில் அவசரப்பட்டால் பெரிய ஆபத்தை உண்டுபண்ணிவிடும். எனவே அமைதியாக ஆராயலாம் என இருந்தார். ஒருநாள் மெல்ல தன் மனையியிடம் கதையைத் தொடக்கினார். “கனகம்! கனகம்! நீ கொஞ்ச நாளா எங்கட வீட்டில ஏதாவது வித்தியாசத்தை உணர்றியோ? ” “என்னங்க புதிராப் பேசிறீங்க, அப்பிடியென்ன புதினத்தை கண்டுட்டீங்க?” “அப்பிடியில்லையப்பா, உன் மகளின் போக்கில் ஏதாவது மாற்றம் தெரியுதா? ஏதாவது விடயங்களில் தனது நேரத்தை போக்குகின்றாளா? ஏன் கேட்கிறணென்டால் உனக்குத் தெரியாமல் இந்த வீட்டில ஒண்டும் நடவாது. பிள்ளையை ஒருவன் கையில ஒப்படைக்கிற வரைக்கும் நாங்க தான் கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கோணும்.” “ இதென்ன புதுக்கதை சொல்லுறியள், சத்தியமா எனக்கு ஒண்டும் தெரியவே தெரியாது. நீங்க தான் ஏதோ மறைக்கிறீங்க, அதை என்னெண்டு தான் சொல்லுங்கோவன்”. “என் நண்பன் முத்துலிங்க முதலியின் வீட்டுக்கு ஒரு காரியமாய்ப் போயிருந்தன். அப்போது தான் பேச்சுவாக்கில் அவன் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னவன். இவள் பிள்ளை வடிவழகியும் சங்கிலியும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கினமாம். இவ்விடயத்தை இப்படியே விட்டால் எங்கள் தலையில இடியைப் போட்டுட்டு இவள் ஏதாவது செய்து விடுவாள். அது பெருத்த அவமானமாய்ப் போய்விடும்”. “ இப்படியேதாவது நடந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்.” சிறிது யோசித்து விட்டு “எங்கள் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தோப்பில் சில நாட்களாக சங்கிலி நடமாட்டம் தெரிகின்றது. இவள் பிள்ளையும் அடிக்கடி சோலைக்கு போகிறாள். சிலவேளை இது உண்மையாக இருக்குமா?” கனகம் அங்கலாய்த்தாள். “அது தானே பார்த்தேன். நெருப்பில்லாமல் புகையுமோ? நீ இனிக்கவனமாக இருக்க வேண்டும். உன் பெண்ணை தோப்புப் பக்கம் போகாமல் பார்த்துக்கொள். அவள் வந்த நல்ல புத்திமதிகளைச் சொல்ல அவள் மனத்தை மாற்ற முயற்சி பண்ண வேண்டும்”. அவ்வேளை வடிவழகி வெளியில் இருந்து வீட்டினுள் நுழைந்தாள். அப்பாமுதலி பேச்சை நிறுத்திவிட்டு தனது மனைவிக்கு கண்ணைக் காட்டினார். உடனே மனைவி கனகம் மகளை நோக்கி “எடி! பிள்ளை… இஞ்சை ஒருக்கா வந்திட்டுப் போ” “என்னம்மா! என்ன விஷயம்?” “அது… வந்து… நான் நேரடியாக விஷயத்துக்கு வாரன். உனக்கும் சங்கிலிக்கும் ஏதாவது தொடர்பிருக்கோ? வெளியில் பலபேர் பலவிதமாக் கதைக்கினம். இறுதியில் எங்களுக்கு தானே அவமானம்”. திகைத்த வடிவு “சங்…கிலி…யுடனா? இல்..லை… அம்மா…. நான் அவரைக் காண்பதே இல்லையே” வடிவழகி மென்று விழுங்கினாள். “இதோ பார்! அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் இப்பொழுது இருந்து அதை மாற்றிக்கொள். உந்த இடம் சரிப்பட்டு வராது. சங்கிலியோ ஏற்கனவே திருமணம் ஆனவன். அவனுக்கு பட்டத்துத்தேவி இருக்கிறாள். நீ அவனைக் காதலித்து மணம் முடித்தால் அவன் ஆசை நாயகியாக தான் இருக்கலாம். அரசுரிமை உன் வாரிசுகளுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆகையால் உந்தத் தொடர்பை விட்டுவிடு. அப்பா உனக்கு எல்லா வகையிலும் ஏற்ற மாப்பிளை பார்த்திருக்கின்றார். அவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.” கனகம் கூறினாள். இதைக்கேட்ட வடிவழகியின் முகத்தில் இருள் குடிகொண்டது. கண்களில் கண்ணீர் சுரந்தது. அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு “யாரம்மா அவர்?” என்று கேட்டாள். சங்கிலியின் அண்ணன் மகன் பரராஜசிங்க முதலி” “பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே “நான் மாட்டன்” என வெடுக்கென பதில் கூறினாள். அதுவரை சம்பாசனையை ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அப்பாமுதலி கோபம் கண்களில் கொப்பளிக்க திடீரென உட்புகுந்தார். “ அவனுக்கென்ன குறைச்சல்?” “குறையொண்டும் இல்லைத்தான். ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கல. அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டன்”. வடிவழகி உறுதியுடன் கூறினாள்.ஸ “ஓகோ! பேச்சு அப்படியும் போகுதோ… எங்களையே எதிர்த்துப் பேசுற அளவுக்கு நீ பெரிய மனுஷி ஆகிட்டாய். இதோ பார், நாங்க எது செய்தாலும் உன் நன்மைக்குத் தான் செய்வம். பேசாமல் எங்கள் பேச்சைக் கேட்டு நட” அப்பாமுதலி கூறிமுடிக்க வீட்டு வாயிலின் முன் அமளிதுமளிப்பட்டது. மனைவியையும் மகளையும் உட்செல்லப்பணித்துவிட்டு வாயிலை நோக்கிச் சென்று பின் பரநிரபசிங்கன் தலைமையிலான சிறு கும்பலுடன் உள் வருகின்றார். “வாருங்கள் அரசே, வந்து உட்காருங்கள்” “ நான் என் தனிப்பட்ட விஷயமாக இவ்விடம் வந்தேன். உம்மையும் ஒருமுறை பார்த்துச் செல்லலாம் என வந்தேன்” கூறிக்கொண்டே இருக்கையில் அமர்ந்தார் பரநிருபசிங்கன். “மிக்க நல்லது” உள் திரும்பி “கனகம் அரசருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடு” என்று கூறிவிட்டு மீண்டும் பரநிரபசிங்கன் பக்கம் திரும்பி “நீங்கள் கண்டி சென்றீர்களே மருத்துவம் செய்விக்க, இப்போது அவர்களுக்கு சுகம் தானே?” “ஓம்! அவர்கள் மெத்த சுகம். சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் எங்கள் குடும்பத்தில் தான் துக்கம் நடந்துவிட்டது.” என்ன பண்டாரத்தின் கொலை பற்றி கூறுகிறீர்களா? அது இருக்கட்டும் நீங்கள் அரச பதவி துறந்தது பற்றியும் ஒருகதை உலாவுகிறதே” என தனது கதையைத் தொடக்கினார் அப்பாமுதலி. “என்ன மாதிரி?” “தாங்கள் செய்தது முறையல்ல என்று” “இல்லை.. இல்லை. அதுதான் சரி! என்னைவிட சங்கிலி ரொம்ப கெட்டிக்காரன், அவன் தான் அரசாளத் தகுதியானவன்”. “அது உண்மை தான். ஆனால் அப்பதவிக்கு அவன் தகுந்தவன் தானா என ஐயப்பட வைக்கிறது”. “ஏன் அப்படி?” “அவன் பட்டத்து ராணியின் மகனல்ல, அது தவிர ஒழுக்கத்திலும்…” “ஏன் ? அவன் யாரிடம் முறைதவறி நடந்தான். அவ்வாறு ஏதாவது நடந்திருந்தாலும் தனது நிலைக்குத் தக்கவாறு மாற்றிக்கொள்வான்”. “ அவ்வாறெனில் பறவாயில்லை. ஆனால் அவர் நாட்டிலுள்ள பெண்களையெல்லாம் தொல்லைப்படுத்தித் திரிகிறார். அது மட்டுமல்ல என் குடும்பத்திலும்….” சொல்ல முடியாதவாறு போலிக்கண்ணீர் வடித்து பரநிருபசிங்கனிடம் முறையிட்டார் அப்பாமுதலி. “என்ன சொல்கிறீர்? உமது குடும்பத்திலேயா? கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்கள் பார்க்கலாம்”. “நானோ? இந்த ஏழை சொல்லப் பயமாக இருக்கின்றது” “ பரவாயில்லை. நான் இருக்கின்றேன். எதுவானாலும் வெளிப்படையாகக் கூறும்” “ அரசே! என் மகள் வடிவழகி மீதும் கண் வைத்துத் திரிகிறார். இது கைகூடுமானால் என் குடும்பமே கெட்டுவிடும்”. எனக் கூறி பரநிருபசிங்கன் காலில் விழுகின்றார். “முதலியாரே! பயப்படவேண்டாம். நான் சங்கிலியின் மற்றக்குற்றங்களை பொறுத்தாலும், வடிவழகி விடயத்தில் வாய்கட்டி நிற்க மாட்டேன்.” “நீங்கள் அரச பதவியை ஏற்றிருந்தால் இந்தக் கெடுதி ஒன்றும் வந்திருக்காது. என்ன செய்வது? எங்கள் தலைவிதி அவ்வளவு தான்”. எனப் பெருமூச்சு விடுகின்றார். “போனதைப்பற்றி கவலைப்பட்டுப் பயனில்லை. உம் மகள் வடிவழகியை எனது மாளிகைக்குக் கொண்டுவந்து எனது பாதுகாப்பில் விடும். அவளுக்கு ஒரு துன்பமும் நேராது”. பரநிருபசிங்கன் அப்பாமுதலியின் வீட்டிலிருந்து கிளம்பினான். “தாங்கள் இங்கு வந்தது நான் செய்த பாக்கியமே” எனப் பெரும்பாரம் இறங்கியது போல அப்பாமுதலி கூறினார். மற்றைய ஒருசோடி கண்களுக்குரியவன் சங்கிலியின் வாழ்க்கையிலேயே சூறாவளியை உண்டு பண்ணிவிட்டான். சாதிக்க வருவான்

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 6 – இணைவு)

மன்னாரில் இருந்து மீண்ட சங்கிலி ஒரு ஓய்வு நேரத்தில் வீரமாப்பாணனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றான். “அரசே! நீங்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றை மறந்து விட்டீர்கள். இராஜாங்க காரியங்களிலேயே ஈடுபடுகிறீர்கள்” என நகைத்தான். அவன் என்ன கூறுகின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சங்கிலி “அப்படியில்லையடா! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவள் நினைவாகத் தான் இருக்கின்றேன். அரச காரியங்கள் அவளை என்னிடம் இருந்து பிரிக்கின்றன. இந்த அரசுப் பொறுப்பை ஏன் ஏற்றேன்? என இப்பொழுது மனம் நினைக்கின்றது” என்று கூறினான். “அரசே! இப்பொழுது தான் உங்களுக்கு நல்லது. அரசன் ஆனபடியால் யாரையும் எங்கும் நீங்கள் சந்திக்கலாம். புறப்படுங்கள் போவோம். எனக்கும் கடற்கரையில் நீந்த வேண்டும் போல் இருக்கின்றது. இருவர் ஆசையும் நிறைவேறும் வாருங்கள்” எனத் துரிதப்படுத்தினான். சோழியர்புரத்திலே அப்பாமுதலியின் வீட்டில் வடிவழகியும் செங்கமலமும் உட்கார்ந்து அளவளாவுகின்றனர். “ஏன்டி வடிவு! வீட்டை அப்பா, அம்மா இல்லையா?” “ இல்லையடி அவர்கள் அரண்மனைக்கு சென்றவர்கள் இரண்டு நாட்களாகியும் வரவேயில்லை” என்று அலுத்துக் கொண்டாள். தோழியின் மனநிலையைப் புரிந்த செங்கமலம் “ பெற்றோரை மட்டும் தான் காணவில்லையா? அல்லது உற்றோரையுமா?....” இழுத்தாள். அவள் என்ன குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்த வடிவழகியின் முகம் குங்குமச் சிவப்பானது. வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். “அட! வெட்கத்தைப் பாரேன். பூப்படைந்த போது கூட நீ இப்படித் தலை குனியவில்லை.” எனக் கிண்டலடித்தாள். “அது கிடக்கட்டும் மன்னர் கடைசியாக எப்பொழுது உன்னைக் கண்டார்” செங்கமலம் கேட்டாள். “ அவர் மன்னராவதற்கு முன்னால்” என ஒரு ஏக்கப் பெருமூச்சை விட்டாள். “அது தானே! அவக்கு நிறைய ராஜ காரியங்கள் இருக்கும், உன்னை நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறாரா? இப்ப எந்த மயிலுடன் நடனமாடுகிறாரோ” என செங்கமலம் சீண்டினாள். இந்தச் சம்பாசனையை அறவே ரசிக்காத வடிவழகி கோபத்துடன் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டாள். “அட! மகாராணிக்கு கோபத்தைப் பாரேன். நான் விளையாட்டாக கூறினேன். நீ உண்மை என நம்பிவிட்டாயா?” என வினவினாள். “அவர் அப்படிப்பட்டவர் அல்ல” எனக் கூறினாள் வடிவு. “ஏய்! நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவர் அல்ல, திருமணத்திற்கு முன் உன்னைக் காணாமல் விட்டு விட்டாரே என்றுதான் கவலையாக இருக்கின்றது. ஆனால் உன்னைக் கண்ட பின் வேறு எந்தப் பெண்களையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டர். இது அவர் முகத்திலேயே தெரிகின்றது. நீ பயப்படாமல் இரு! அவர் நிச்சயமாக உன்னைச் சந்திக்க வருவார்” என செங்கமலம் தைரியம் கூறினாள். அந்தவேளை வீட்டு வாசலிலே குதிரைக் காலடி ஓசை கேட்டது. நிமிர்ந்து பார்த்த இரு பெண்களும் ஆச்சரியப் பட்டார்கள். வாயிலில் சங்கிலி அரசன் நின்றிருந்தான். இதைக் கண்டவுடன் செங்கமலம் எழுந்து பின்பக்கமாக ஓடி விட்டாள். என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடிப் போன வடிவழகி எழுந்து வீட்டினுள் சென்று கதைவைச் சாத்திக் கொண்டாள். வாசற்கதவைத் திறந்து கொண்டு உட்சென்ற சங்கிலி வடிவழகியைத் தேடிய போது உள் அறைக்கதவு ஒன்று சற்றத் திறந்திருந்தது. மஞ்சத்தில் தேவேந்திரச் சிற்பி செதுக்கிய சிலையென வடிவழகி ஒருக்களித்துப் படுத்திருந்தாள். மொகலாயர் காலத்தில் பிரசித்தி பெற்ற லஸ்தர் விளக்கு ஒன்றின் மங்கலான வெளிச்சம் அந்த அறையின் மூலையில் இருந்து அவள் மேல் லேசாக விழுந்தது. அவள் உடுத்தியிருந்த சேலை கூட விலகாமல் அவள் உடல் பூராவையும் நன்றாக மறைத்தே நின்றது. அவள் சுந்தர வதனத்தில் இருந்த தெய்வீக அழகில் ஈடுபட்டு சங்கிலி சிறிது நேரம் நின்றான். அவள் முகத்தில் பல உணர்ச்சிகள் வந்து பிரதிபலித்தன. புருவங்கள் நானேற்றும் வில்லைப்போல் நன்றாக ஒருமுறை வளைந்து நெருங்கின. அவற்றைத் தொடர்ந்து திலகப்பிரதேசம் சிறிது சுளித்தது. துக்கம் நிறைந்த முகத்தில் அடுத்தபடியாக மகிழ்ச்சிக் குறி படர்ந்தது. இதழ்கள் மந்தகாசத்தால் விரிந்தன. தேகம் பூராவும் சந்தோசத்தின் ஆனந்தச் சாயல்! கன்னங்களில் இரு ரோஜா மலர்கள் வெட்கமளித்தன. இவற்றை அவதானித்த சங்கிலி “பாரேன் நான் வந்தது கூடத் தெரியாமல் படுத்திருக்கிறாள். இவளுக்கு இவ்வளவு வெட்கமா?” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவள் படுத்திருந்த பஞ்சனையை அணுகி ஓர் ஓரத்தில் இருந்தான். மெல்ல தன் ஒரு கையை அவள் தோள் மீது வைத்து “வடிவழகி …” என அழைத்தான். பதிலுக்கு “ உம்….” என்ற ஒற்றைச் சொல்லே அவள் வாயிலிருந்து வெளிவந்தது. மெல்ல தன் தலையைக் குனிந்து அவள் கன்னத்தில் உதட்டைப் பதித்தான். அவனது ஒரு கை அவள் இடையில் தவழ்ந்தது. அவள் மார்போ பயத்தால் மிக வேகமாக எழுந்து தாழ்ந்தது. அப்படியே அவளை வாரி அணைத்துக் கொண்டான். மஞ்சம் சிருஷ்டித்த மணவறையிலே மகிழ்ந்து இணைந்து விட்ட காதலர்கள் இருவரும் மறுநாள் வௌ;வேறு அலுவல்களில் ஈடுபட்டாலும் அவ்விருவர் மனங்களிலும் முந்திய இரவின் இன்ப நினைப்புகளிலேயே ஈடுபட்டுக்கிடந்தது. இதனால் அவ்விருவரும் மறுநாள் சற்றுத் தடுமாற்றத்துடனேயே நடந்து கொண்டார்கள். இரவில் பஞ்சனையிலே உறங்கிவிட்ட இருவருள் பொழுது புலருவதற்குள் வெகு நேரமிருக்கையிலேயே கண்விழித்துவிட்ட வடிவழகி விளக்கின் ஒளியில் அருகே கிடந்த ஆடவன் மீது கண்களை ஓட்டினாள். அவன் அலுத்துக் களைத்து உறங்குவதைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு புதுப்பொழிவும் பெருமையும் துலங்கின. சற்றுத்தடுமாறி எழுந்து உட்கார்ந்து கொண்ட அவள் பல வினாடிகள் தன் முந்தாளைக் கட்டிக்கொண்டு அந்தக் கட்டிளங்காளையைப் பார்த்த வண்ணமே உட்கார்ந்திருந்தாள். பிறகு மெல்ல ஒருமுறை அவன் உடல் மீது கையை வைத்து உலுக்கிப் பார்த்தாள். அவன் சிறிதும் அசையாமல் அயர்ந்து தூங்குவதைக் கண்டதும் சிறிது புன்முறுவல் கொண்டு தலையை அண்ணாந்து பின்னலைப் பிரித்து குழல்களை முடிந்து கொண்டு எழுந்திருந்து வெளிச்சென்றாள். எத்தனையோ இன்ப எண்ணங்கள் மனதில் அலைபாய அந்த எண்ணங்களால் உடல் பலவிதமாய் ஒய்யார அசைவு அசைய, இடைதுவள, கால்கள் சரியாக நடக்கமுடியாமல் பின்ன அவள் தன் காலைக்கடன்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தின் பின் கண்விழித்த சங்கிலி தன் பக்கத்தில் வடிவழகி இல்லையெனக் கண்டதும் அவளைத் தேடாது விட்டு வெட்கத்தில் அரண்மனை செல்வதற்காக குதிரையேறினான். அவ்வாறு அவன் வெளியேறியதை இருசோடி கண்கள் மறைந்து நின்று பார்த்தன. சாதிக்க வருவான்…

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner